பக்கம் எண் :

624கிட்கிந்தா காண்டம்

போல்வான்' (4595) என உவமித்ததற்கேற்ப இங்கு அவன் அங்கதனால்
அடியுண்டு விழுந்ததை இடியுண்டு விழுந்த மலை என்றார்.              8

அசுரனைப் பற்றி அனுமன் வினாவும் அங்கதன் விடையும்

4602.'யார் கொலாம் இவன்?
      இழைத்தது என்?' எனா,
தாரை சேயினைத்
      தனி வினாவினான்.
மாருதேயன்; மற்று அவனும்,
      'வாய்மை சால்
ஆரியா! தெரிந்து
      அறிகிலேன்' என்றான்.

     மாருதேயன் -வாயுவின் மகனான அனுமன்;தாரை சேயினை -
தாரையின் மகனான அங்கதனை நோக்கி;இவன் யார் கொல் ஆம் -
(இறந்து கீழே விழுந்து கிடக்கும்) இவன் யார்? இழைத்தது என் -இவன்
செய்தது என்ன?எனா -என்று;தனி வினாவினான் -குறிப்பிட்டுக்
கேட்டான்;மற்று -பின்பு;அவனும் -அந்த அங்கதனும் (அனுமனை
நோக்கி);வாய்மை சால் ஆரியா -வாய்மை நிறைந்த பெரியவனே!தெரிந்து
அறிகிலேன் -
நான் இவனைப் பற்றி ஒன்றும் அறியேன்;என்றான் -என்று
விடை கூறினான்.

     கொல் - ஐயப்பொருளையும், சால் - மிகுதிப் பொருளையும் உணர்த்திய
உரிச் சொற்கள்.  இவன் என்பது மத்திமதீபம் இடைநிலை விளக்காய் நின்று
'யார் கொலாம்' என்பதையும், 'இழைத்ததென்' என்பதையும் தழுவியது.
மாருதேயன்: மருத்தின் புதல்வன் - தத்திதாந்தப் பெயர். வாய்மை, கல்வி
முதலியவற்றாலும் ஒழுக்கத்தாலும் சிறந்தவனாதலால் அனுமனை அங்கதன்
'ஆரியா' என்று விளித்தான்.                                      9

சாம்பவான் துமிரன் வரலாறு கூறுதல்

4603.'யான் இவன்தனைத் தெரிய எண்ணினேன்;
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே -
ரான், இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
தானவன்' என, சாம்பன் சாற்றினான்.

     (அது கேட்டுச்) சாம்பன் -(அனுமனை நோக்கி) கரடிகளுக்குத்
தலைவனான சாம்பவான்;யான் இவன்தனை -நான் இந்த அசுரனைக்
குறித்து;தெரிய எண்ணினேன் -இன்னானென்று தெரிந்து கொள்ளும்படி
நினைத்துப் பார்த்தேன்;தூ நிவந்த வேல் -பகைவரது புலால் நிறைந்த
வேற்படையைத் தாங்கியுள்ள;துமிரன் என்னும் பேரான் -துமிரன் என்னும்
பெயரையுடையவன்;இவ் ஆழ்புனல் பொய்கை ஆளும் -ஆழ்ந்த
நீரையுடைய இந்தப் பொய்கையை ஆட்சி செய்கின்ற;ஓர் தானவன் -ஓர்
அசுரனாவான்;எனச் சாற்றினான் -என்று கூறினான்.