முலைகளையும்;தடத்து ஏய் ஆம்பல் -நீர் நிலையில் பொருந் திய செவ்வாம்பல் மலராகிய;உண்ண இன் அமிழ்து ஊறுவாய் -பருகுமிடத்து இனிய அமிழ்தம் சுரக்கின்ற வாயையும்;தரளம் -முத்துக் களாகிய;வண்ண வெண் நகை -அழகான ஒளிமிக்க பற்களையும்;வாள்முகம் -ஒளி பொருந்திய (தாமரை மலர்களாகிய) முகத்தையு முடைய;பெண்ணை - பெண்ணை நதியாகிய ஒரு பெண்ணை;நண்ணினார் -சென்று சேர்ந்தார்கள். பெண்ணை நதியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தினார். பெண்ணை : நதி, பெண்; இச் சொல் நதியைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் (பெண்ணை - பெண்ணையை), மற்றொரு பொருளான பெண்ணைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமை விரியாகவும் (பெண் - ஐ) கொள்ள வேண்டும். பெண்ணை நதி: மணற்குன்றுகள், செவ்வாம்பல், முத்துக்கள், தாமரை. பெண்: முலைகள், வாய், பற்கள், முகம். சிலேடையணியை அங்கமாகக் கொண்டுவந்த இயைபுருவகவணி. உவமையாவதற்குரிய சக்கரவாகப் பறவையை உவமேயமாகிய முலைகளிலும் தாழ்த்தி்க் கூறியது எதிர்நிலையணி. முலைகளுக்குப் புளினம் உயர்ச்சியில் உவமையாம். நயம்: பெண்ணை நாடுவோர் பெண்ணை நண்ணினார். இதில் பெண்ணை என்ற சொல் இரட்டுற மொழிதலாக ஒரு பெண்ணுக்கும் பெண்ணையென்னும் நதிக்கும் அமைத்த நயம்காணத்தக்கது. 12 4606. | துறையும், தோகை நின்று ஆடு சூழலும், குறையும், சோலையும், குளிர்ந்த சாரல் நீர்ச் சிறையும், தெள்ளு பூந் தடமும், தெண் பளிக்கு அறையும், தேடினார் - அறிவின் நீடினார். |
அறிவின் நீடினார் -அறிவின் எல்லைகளைக் கண்டவர்களான அவ் வானர வீரர்;துறையும் -(அந்த நதியின்) இறங்கு துறைகளிலும்;தோகை நின்று ஆடு சூழலும் -மயில்கள் (களிப்போடு) நின்று கூத்தாடு கின்ற இடங்களிலும்;குறையும் -அந்த ஆற்றின் இடையே இருந்த திட்டுக்களிலும்; சோலையும் -அநத ஆற்றையடுத்த பூஞ்சோலைகளிலும்;குளிர்ந்த சாரல் நீர்ச் சிறையும் -குளிர்ந்த காற்று வீசும் பக்கங்களிலமைந்த நீர்நிலைகளான ஏரி குளங்களிலும்;தெள்ளு பூந் தடமும் -தெளிவான மலர்கள் நிறைந்த தடாகங்களிலும்;தெண் பளிக்கு அறையும் -ஒளியுடன் விளங்கிய பளிங்குப் பாறைகளிலும்;தேடினார் -சீதையைத் தேடினார்கள். தோகை: சினையாகுபெயராய் மயிலைக் குறித்தது. குறை: ஆற்றிடைத் திட்டு (தீவு). 13 4607. | அணி கொழித்து வந்து, எவரும் ஆடுவார் பிணி கொழித்து, வெம் பிறவி வேரின் வன் துணி கொழித்து, அருஞ் சுழிகள்தோறும், நல் மணி கொழிப்பதன் துறையின் வைகினார். |
|