பக்கம் எண் :

ஆறு செல் படலம் 627

     அணி கொழித்து வந்து -அழகாக அலை வீசிக் கொண்டு வந்தும்;
ஆடுவார் எவரும் -
(தன்னிடம்) மூழ்கினார் எவராயினும்;பிணி கொழித்து
-
நோய்கள் நிறைந்த;வெம் பிறவி வேரின் வன்துணி கொழித்து -கொடிய
பிறப்புக்களினுடைய வேர்கள் (வினை) வலிய துண்டுகளையடித்துக் கொண்டும்;
அருஞ் சுழிகள் தோறும் -
(தப்புவதற்கு அரிய) தன் நீர்ச் சுழிகளிலெல்லாம்;
நல் மணி கொழிப்பதன் -
சிறந்த இரத்தினங்களை வாரிக் கொண்டும்
வருகின்ற பெண்ணை நதியின்;துறையின் வைகினார் -ஒரு துறையில்
(வானர வீரர்) தங்கியிருந்தார்கள்.

     தன்னில் மூழ்கியவர் எந்த அளவு பாவியராயிருப்பினும் அவர்களது
பிறவிக்குக் காரணமான பாவங்களையெல்லாம் போக்கி, அவர்களுக்கு
முத்தியளிக்க வல்ல பெருமையுள்ளதும், நீர்ச் சுழிகளில் இரத்தினங்களை
வாரிக்கொண்டு வரும் வளமுள்ளதுமான பெண்ணை நதியின் தென்கரையை
அடைந்து வானர வீரர்கள் தங்கினார்கள் என்பது.  பிறவிவேர் - பிறப்புக்குக்
காரணமான வினைகள் 'கொழித்தல்' என்னும் வினைச் சொல் வெவ்வேறு
பொருளில் பலமுறை வந்தது:சொற்பின்வருநிலையணி.               14

தசநவ நாடு அடைதல்

4608.ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்;
காடு நண்ணினார்; மலை கடந்துளார்;
வீடு நண்ணினார் என்ன, வீசும் நீர் -
நாடு நண்ணினார் - நாடு நண்ணினார்.

     நாடு நண்ணினார் -(சீதையைத்) தேடுவதை மேற்கொண்ட அவ் வானர
வீரர்கள்;நீர் ஆடு பெண்ணை ஆறும் ஏறினார் -யாவரும் வந்து நீராடும்
பெண்ணை நதியைக் கடந்தனர்;காடு நண்ணினார் -பல
காடுகளையடைந்தனர்;மலை கடந்து உளார் -பல மலைகளைத் தாண்டிச்
சென்றனர்;வீடு நண்ணினார் என்ன -முத்தி உலகத்தை யடைந்தவர்களே
போல;வீசும் நீர் -அலை வீசும் நீர்வளத்தால் சிறந்த;நாடு நண்ணினார் -
தசநவ நாட்டையணுகினார்கள்.

     வானரர்கள் பல காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து இறுதியில்
நீர்வளமுள்ள தசநவ நாட்டையடைந்ததற்குப் பல பிறவிகளில் அலைந்து
திரிந்தவன் இறுதியில் முத்தியுலகத்தையடைவதை உவமை கூறினார்.  நாடு -
பிந்தியது: முதனிலைத் தொழிற்பெயர். நாடு நண்ணினார் நாடு நண்ணினார் -
மடக்கணி.                                                     15

4609. தசநவப் பெயர்ச் சரள சண்பகத்து,
அசந அப் புலத்து அகணி நாடு ஒரீஇ,
உசநவப் பெயர்க் கவி உதித்த பேர்
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார்.