பக்கம் எண் :

ஆறு செல் படலம் 643

     தெருவின் ஆர்ப்புறும் -வீதிகளில் ஆரவாரிக்கின்ற;பல் இயம் -பல
வகை இசைக் கருவிகளின் ஒலிகளை;தேர் மயில் -கேட்டுணர்ந்த மயில்கள்
(அந்த முழக்கத்தை);கருவி மா மழை என்று -மழைக்கு முதற்காரணமாகிய
மேகத்தின் இடியென்ற மயங்கி;களிப்பு உறா -மகிழ்ச்சியடையமாட்டா;
அன்னமும் -
(அங்குள்ள) அன்னப் பறவைகளும்;பொருநர் தண்ணுமைக்கு
-
கூத்தர் முழக்கும் மத்தள வோசை கேட்டு (அதை மேகத்தின் இடியென்று
மயங்கி);போகலா -(அதற்கு அஞ்சி) விலகிச் செல்லமாட்டா;மருவினார்க்கு
-
எப்போதும் கலந்து பழகுகின்றவர்களுக்கு;மயக்கும் உண்டாம் கொலோ -
மன மயக்கம் உண்டாகுமோ? (உண்டாகாது).

     மேகத்தின் இடியோசைகேட்டு மகிழ்ச்சியடைதல் மயில்களுக்கும்,
அஞ்சுதல் அன்னப் பறவைகளுக்கும் இயல்பு.  ஆனால், எப்பொழுதும் அத்
தொண்டை நாட்டு வீதிகளில் விழா நடப்பதால் பலவகை வாத்திய ஓசைகளைக்
கேட்டுப் பழகிய மயில்களுக்கு அந்த ஆரவாரவொலி மகிழ்ச்சியை
உண்டாக்குவதில்லை; அங்குள்ள அன்னப் பறவைகளும் அவ்வாத்திய ஒலி
கேட்டு அஞ்சி அகல்வதில்லை; இதனால் பழக்கமே அவற்றிற்குத் துணிவைத்
தந்தது என்பது.  பொருநர்: கூத்தாடுவோர்.  போர்க்களம் பாடுவோர்,
ஏர்க்களம் பாடுவோரென இரு வகையினர்.  பல் இயம்: தோற் கருவி, துளைக்
கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி எனப் பலவகைப்படும். வேற்றுப்
பொருள் வைப்பணி.                                            42

4636.தேரை வென்று உயர் தெங்க இளம் பாளையை
நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ;
தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று, புலம்புவ, தேரையே.

     தேரை வென்று உயர் -தேர்போல உயர்ந்த (விரிந்த) தலையை
யுடைய;தெங்கு இளம் பாளையை -தென்னை மரத்தின் இளமையான
பாளையை(க் கண்டு);இளங் கெண்டை -கெண்டை மீன் குஞ்சுகள்; நாரை
என்று நடுங்குவ -
(அது தங்களைக் கொத்தித் தின்ன வரும்) நாரையென்று
நினைத்து அஞ்சி நடுங்கும்;தாரை வன் தலை -கூர் மையான வலிய
நுனியுள்ள;தண் இள ஆம்பலை -அரும்பைக் கொண்ட குளிர்ந்த இளைய
அல்லித் தண்டைக் கண்டு; தேரை -தேரை கள்(தவளைகள்);சேரை
என்று-
(அவை நம்மை விழுங்க வரும்) சாரைப் பாம்பென்று நினைத்து;
புலம்புவ -(அஞ்சி) வாய்விட்டு அலறும்.

     ஏ: ஈற்றசை. விரியாத தென்னம்பாளைகள் நாரைகளையும்,
அரும்புகளையுடைய செவ்வல்லித் தண்டுகள் சாரைப் பாம்புகளையும்
வடிவத்தால் ஒக்கும்: தென்னம் பாளையை இளங்கெண்டை மீன்கள்
நாரையாகவும், செவ்வல்லித் தண்டினைத் தேரைகள் சாரைப் பாம்புகளாகவும்
எண்ணி அஞ்சிப் புலம்பியதாகக் கூறியது மயக்கவணி.  சேரை என்பது சாரை
என வழங்கும்.  தாரை: கூர்நுனி (தார்க் குச்சி என்ற தொடரில் கூர்மை என்ற
பொருளில் வருவது காண்க).                                     43