'என்றான்' என்று அடுத்த செய்யுளோடு தொடர்ந்து முடியும். இராம நாமம் ஓதியதால் சம்பாதியின் சிறகு முளைத்தது என்னும் செய்தி. கம்பர் படைப்பு; வான்மீகத்தில் இல்லை. 48 இராம நாமம் கேட்டுச் சம்பாதியின் சிறை வளர்தல் 4696. | என்றான், 'அன்னது காண்டும் யாம்' எனா, நின்றார் நின்றுழி, நீல மேனியான் நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார், வன் தோளான் சிறை வானம் தாயவே. |
என்றான் -என்று (சம்பாதி) கூறினான் (அதுகேட்ட வானரர்கள்);யான் அன்னது காண்டும் எனா -நாங்கள் அதைக் காண்போம் என்று சொல்லி; நின்றார் நின்றுழி -நின்றவர் நின்றபடியே;நீலமேனியான் - நீலமேனியையுடைய இராமனது;நன்கு ஆம் நாமம் - நன்மையை அருளும் 'இராம' என்னும் திருநாமத்தை;நவின்று நல்கினார் -உச்சரித்துதவினார்கள் (அதனால்);வன் தோளான் சிறை -வலிய தோள்களையுடைய சம்பாதியின் சிறகுகள்;வானம் தாய -வானளாவித்தாவி வளர்ந்தன. 'ஏ' : ஈற்றசை. இராம கைங்கரியத்தில் துணைபுரிய வேண்டுமென்ற கருத்தினாலேயே சம்பாதிக்கு வெந்த சிறகை முளைத்திட அப்போதே முனிவர் அருள் புரியவில்லை யென்பதும், இந்த வானர வீரரோடு பேச்சு நிகழ்கையில்தான் அந்தச் சம்பாதியின் சிறகு முளைத்தது என்பதும் வான்மீகத்தால் பெறப்படும். நீலமேனியான் நன்றாம் நாமம்: திருமாலின் ஆயிர நாமங்களுள் சிறந்ததான 'இராம நாமம்' என்பதும் பொருந்தும். 49 4697. | சிறை பெற்றான், திகழ்கின்ற மேனியான், முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் - நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான். |
ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் -புகையோடு கூடிய நெருப்பைக் கக்கும் வாளானது;உறை பெற்றால் எனல் ஆம் -ஓர் உறையைப் பெற்றது என்று சொல்லத் தக்க;உறுப்பினான் -அலகினைப் பெற்றவனாகிய சம்பாதி; திகழ்கின்ற மேனியான் -விளங்கும் உடம்பையுடையவனாய்;முறை பெற்று ஆம் -வரிசையாகப் பொருந்தி;உலகு எங்கும் மூடினான் -உலகங்கள் எல்லாவற்றிலும் பரவித் தன் சிறகுகளால் மூடியவனாய்;நிறை பெற்று - வலிமை பெற்று;சிறை பெற்றான் -(தனது கரிந்துபோன) சிறகுகள் (முன்போல) வளரப் பெற்றான். |