| சொன்னார்; சொற்றது சிந்தை தோய்வுற, தன்னால் உற்றது தான் விளம்புவான்: |
அன்னானைக் கடிது அஞ்சலித்து -(வானர வீரர்கள்) சிறகு பெற்ற அந்தச் சம்பாதியை விரைந்து கை கூப்பி வணங்கி;முன்னால் உற்றது - முன்காலத்து நடந்த வரலாறு;நீ முற்றும் ஓது -நீ முழுவதையும் கூறுவாய்; எனச் சொன்னார் -என்று வேண்டினார்கள்;சொற்றது சிந்தை தோய்வுற - அவர்கள் கூறியது மனத்தில் பதிய;தன்னால் உற்றது -தனக்கு நேர்ந்ததை (இறகு கரிந்த காரணத்தை);தான் -அந்தச் சம்பாதி;விளம்புவான் - (பின்வருமாறு) சொல்வானாயினான். சம்பாதியை வானரர்கள் அஞ்சலித்தது -அவன் இராமநாமத்தின் பெருமையைத் தமக்குத் தெரிவித்தவனாதலாலும், இராமனுக்குப் பெரிய தந்தை முறையாகி அவனது திருவருளைப் பெற்றவனாதலாலும், மிகவும் வயது முதிந்தவனாதலாலும் என்பது. தன்னால் - உருபு மயக்கம். 52 சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல் அறுசீர் ஆசிரிய விருத்தம். 4700. | 'தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்; சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்; பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் ஆய் கதிர்க் கடவுள் தேர்ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; |
தாய் எனத்தகைய நண்பீர் -அன்பு காட்டுவதில் தாய் என்று சொல்லத்தக்க நண்பர்களே!பாய்திரைப் பரவை ஞாலம் -வீசும் அலைகளையுடைய கடலால் சூழப் பெற்ற நிலவுலகத்தில்;படல் இருள் பருகும் பண்பின் -பரவிய இருட்டை விழுங்கும் (போக்கும்) தன்மையுடைய; ஆய் கதிர்க் கடவுள் -சிறந்த கதிர்களோடு கூடிய சூரிய தேவனது;தேர் ஊர் -தேரைச் செலுத்தும் சாரதியான;அருணனுக்கு -அருணனுக்கு; அமைந்த மைந்தர் -பிறந்த மக்களாகிய;சம்பாதி சடாயு என்பேம் - சம்பாதி சடாயு என்ற நாங்கள் இருவரும்;சேய் ஒளிச்சிறைய -அழகிய நிறத்தைக் கொண்ட சிறகுகளையுடை;வேகக் கழுகினுக்கு -வேகமாகப் பறக்கும் கழுகுகளுக்கு;அரசு செய்வேம் -அரசராக இருந்து ஆட்சி செய்தவர்கள். |