16. மயேந்திரப் படலம் மயேந்திர மலையை அடைந்த வானரவீரர்களின் செயல்களை விளக்கிக் கூறும் படலாமாகும். கடலைக் கடப்போர் யாரென வானரர் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். நீலன், அங்கதன், சாம்பன் முதலியோர் தம் இயலாமையைக் கூறுகின்றார்கள்; அவ்வமயம் 'அனுமனே தக்கவன்' எனச் சாம்பவன் உரைக்கிறான்; அந்த அனுமனது வீரத்தைச் சாம்பன் புகழ்ந்துரைக்கிறான்; அனுமன் இலங்கை செல்ல உடன்படுகிறான். பின்னர், மயேந்திர மலையின் உச்சிக்குச் செல்லுகிறான்; கடலைத் தாவிச் செல்ல அனுமன் பெருவடிவு கொள்கிறான். கடலைக் கடப்போர் யாரென வானரர் தமக்குள் பேசிக் கொள்ளுதல் கலித்துறை 4711. | 'பொய் உரைசெய்யான், புள்அரசு' என்றே புகலுற்றார், 'கை உறை நெல்லித் தன்மையின் எல்லாம் கரை கண்டாம்; உய் உரை பெற்றாம்; நல்லவை எல்லாம் உற எண்ணிச் செய்யுமின் ஒன்றோ, செய் வகை நொய்தின் செய வல்லீர்! |
புள் அரசு -கழுகுகளுக்கு அரசனான சம்பாதி;பொய் உரை செய்யான் என்றே -பொய் சொல்லமாட்டான் என்று உறுதியாக நினைத்து; புகலுற்றார் -சொல்லத் தொடங்கியவர்களாகி;செய்வகை நொய்தின் செயவல்லீர்!- செய்ய வேண்டியவற்றை எளிதாகச் செய்து முடிக்க வல்லவர்களே!கை உறை நெல்லத் தன்மையின் -உள்ளங் கையில் பொருந்திய நெல்லிக் கனியின் தன்மை போல;எல்லாம் கரை கண்டாம் - (சீதை இருக்குமிடம் முதலிய செய்திகள்) முழுவதையும் நன்றாக அறிந்தோம் (ஆகவே);உய் உரை பெற்றாம் -(அச் சம்பாதியால்) நாம் வாழ்வதற்குரிய உறுதிமொழிகளையும் அடைந்தோம்;(ஆகவே) நல்லவை எல்லாம் - நன்மை தரக்கூடிய எல்லாவற்றையும்;உற எண்ணி -தக்கவாறு ஆராய்ந்து; ஒன்று செய்யுமின் -(இரண்டில் ஏதேனும்) ஒன்றைச் செய்யுங்கள். |