| ஆண்டு அவர் உவந்து வாழ்த்த, அலர் மழை அமரர் தூவ, சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து உம்பர்ச் சென்றான். |
யான் -நான்;எறி கடல் இலங்கை எய்தி -அலைவீசும் கடலால் சூழப் பெற்ற இலங்கை நகரையடைந்து;மீண்டு இவண் வருதல் காறும் - இங்கே திரும்பி வருகின்ற வரையிலும்;ஈண்டு இனிது உறைமின் -(நீங்கள்) இந்த இடத்தில் தங்கியிருங்கள்;விரைவின் விடை தம்மின் -(எனக்கு விரைவிலே விடை கொடுங்கள்;என்னா -என்று சொல்லி; (அனுமன்); ஆண்டு அவர் உவந்து வாழ்த்த -அப்பொழுது அந்த வானர வீரர்கள் மகிழ்ந்து வாழ்த்துக் கூறவும்;அமரர் அலர் மழை தூவ -தேவர்கள் பூமாரி பொழியவும்;சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து - வானத்தையளாவிய சிகரங்களையுடைய தெய்வத் தன்மையுள்ள மகேந்திரமலையினது;உம்பர்ச் சென்றான் -உச்சிக்குப் போய்ச் சேர்ந்தான். உறைமின், தம்மின்: முன்னிலைப் பன்மை வினை முற்றுக்கள். 25 அனுமன் பெரு வடிவு கொள்ளல் 4736. | பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்ந்த தாள்போல் உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமையாலும் திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான். |
பொரு அரு -ஒப்புக்கூறமுடியாத;வேலை தாவும் புந்தியான் - கடலைக் கடக்க வேண்டுமென்ற உறுதி கொண்ட அனுமன்;புவனம் தாய - உலகங்களைத் திரிவிக்கிரமனாய்த் தாவியளந்த;பெரு வடிவு உயர்ந்த மாயோன் -பெரிய உருவத்தால் உயர்ந்து விளங்கிய திருமாலினுடைய; மேக்கு உறப் பெயர்ந்த தாள் போல -மேலிடத்தில் பொருந்து மாறு உயரவெடுத்த திருவடிபோல;உரு அறி வடிவின் -(தனது) உருவத்தை யாவரும் அறியக் கூடிய பெரு வடிவத்தோடு;உம்பர் ஓங்கினன் - வானத்தையளாவ வளர்ந்தான் (அதனால்);உவமையாலும் - உவமைவகையாலும்;திருவடி என்னும் தன்மை -திருவடியென்கின்ற தனது திருநாமத்தின் தன்மை;யாவர்க்கும் தெரிய நின்றான் -யாவர்க்கும் விளங்கும் படி தோன்றி நின்றான். |