பகு வாய மடங்கல் வைகும் -திறந்த வாயையுடைய ஆண்சிங்கங்கள் வாழ்கின்ற;படர் வரை முழுதும் -பரந்துள்ள அந்த மகேந்திர மலை முழுவதும்;மூழ்க -(அனுமனது பாரம் அழுத்துதலால்) கீழேயழுந்தவும்; ஊழின் நெகு வாய -வரிசையாகத் தோன்றும் சிதைந்த இடங்களையுடைய; சிகர கோடி -அந்த மலையின் சிகரங்கள் பலவும்;நெரிவன தெரிய - நெரிந்து பொடியாக;விடம் உகுவாய கொள் நாகத்து ஒத்த -நஞ்சைக் கக்குகின்ற வாயையுடைய பாம்பினைப் போன்ற;வால் சுற்றி -வாலினால் (தன்னுடம்பைச் சுற்றிக் கொண்டு);நின்றான் -(பேருருவத்தோடு) நின்றவனாகிய அனுமன்;மக ஆமை முதுகில் தோன்றும் -திருமாலாகிய பெரிய ஆமை முதுகின்மேல் விளங்கித் தோன்றிய;மந்தரம் எனலும் ஆனான் - மந்தரமலை என்று சொல்லத்தக்கவனுமானான். அனுமன் உடற்சுமையால் தரையில் அழுந்துகின்ற மகேந்திரமலை - கூர்மாவதார ஆமைக்கும் மகேந்திரமலையில் நின்ற அனுமன் - பெரிய கூர்மத்தால் தாங்கப்பெற்ற மந்தரமலைக்கும், அனுமனது உடலைச் சுற்றிய அவனது வால் - மந்தர மலையைச் சுற்றிய வாசுகிக்கும் ஒப்பாயின என்றார். 28 4739. | மின் நெடுங் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப, தன் நெடுந் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ, வல் நெடுஞ் சிகர கோடி மயேந்திரம், அண்டம் தாங்கும் பொன் நெடுந் தூணின் பாத சிலை என, பொலிந்து நின்றான். |
மின் நெடுங் கொண்டல் -மின்னலோடு கூடிய பெரிய மேகங்கள்; தாளின் வீக்கிய -(தன்) காலில் கட்டப்பெற்ற;கழலின் ஆர்ப்ப -வீரக் கழல்போல ஒலிக்கவும்;தன் நெடுந்தோற்றம் -நீண்டுயர்ந்த தனது பெரிய உருவமானது;வானோர் கட்புலத்து எல்லை தாவ -தேவர்களின் கண்பார்வையாகிய எல்லையைத் தாண்டிச் செல்லவும்;வல் நெடுஞ் சிகர கோடி -வலிய பெரிய சிகரங்களின் தொகுதியையுடைய;மகேந்திரம் - மகேந்திர மலையானது;அண்டம் தாங்கும் பொன் நெடுந் தூணின் -இந்த அண்டகோளத்தைத் தாங்கி நிற்கும் பொன்மயமான பெரிய தூணின்;பாத சிலை என -அடியிலிட்ட கல்லைப் போல விளங்கவும்;பொலிந்து நின்றான்-(அந்த மகேந்திர மலையின் மேல் பேருருவத்துடன்) (அனுமன்) நிமிர்ந்துநின்றான். அனுமன் உலகைத் தாங்கும் தூண்போல நின்றான் என்பதும், அவன் நின்ற மலை அத் தூணின் அடியிலிட்ட கல்லைப்போல விளங்கிற்று என்பதும் விளங்கும். தற்குறிப்பேற்றவணி. |