பிராட்டியைக்கண்டு பேசிப் போவதாகிய செயல், தனது ஆண்மைக்குக் குறைவு என்பதும், வேறு ஒரு பெருஞ் செயலைச் செய்ய வேண்டும் என்பதும் அனுமனது கருத்து. பொறி - புள்ளி. வண்டைக் குறித்தது; ஆகுபெயர். பொறி - வண்டு; பொறி கலந்து பொழில். (தேவாரம்) ‘வண்டுக் கூட்டம் எழ’ என்பது வைகறைப் பொழுதை உணர்த்துகின்றது. சிறுத்தொழில் வலித்தல் விகாரம். சிறுக்குட்டன். சிறுத் தொண்டன் என்பன போன்றது. (1) 5430. | ‘ஈனம் உறுபற்றலரை எற்றி, எயில் மூதூர் மீனநிலையத்தின் உக வீசி, விழி மானை மானவன் மலர்க்கழலில் வைத்தும்இலென் என்றால், ஆன பொழுது, எப்பரிசின், நான் அடியன் ஆவேன் ? |
ஈனம் உறும்பற்றலரை ஏற்றி - இழிவான செயல்கள்பொருந்திய பகைவர்களாகிய அரக்கர்களைத் தாக்கி அழித்து; எயில் மூதூர் - மதில்கள் சூழ்ந்த இந்த இலங்கை நகரை; மீனநிலையத்தின் உகவீசி - மீன்களுக்கு இருப்பிடமான கடலில் சிதறி விழும்படி வீசி எறிந்து; விழி மானை - கண் பார்வையால் மானை ஒத்த பிராட்டியை; மானவன் மலர்க் கழலில் வைத்தும் இலென் என்றால் - இராமபிரானுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளில் (காணிக்கை போல) வைத்து வணங்கவில்லை என்றால்; ஆனபொழுது - அந்நிலையில் நான் உள்ள போதும்; எப்பரிசின் நான் அடியன் ஆவேன் - எவ்விதத்தில் நான் இராமபிரானுக்கு உண்மை அடியவனாக ஆவேன் ? தலைவனதுவிருப்பத்தை நிறைவேற்றுவதே உண்மை அடியவனின் கடமை. இராமபிரானுடைய பகைவர்களை ஒழித்தலை, அடியவனாகிய அனுமன், தனது கடமையாகக் கருதினான். மான்விழி என்பது விழிமான் எனமாறியது; இலக்கணப் போலி - புறநகர், வாயில் என்பன போல. மீனநிலையம் - கடல். புதிய சொல்லாட்சி. (2) 5431. | ‘வஞ்சனைஅரக்கனை நெருக்கி, நெடு வாலால் அஞ்சினுடன் அஞ்சுதலை தோள் உற அசைத்தே, வெஞ் சிறையில்வைத்தும்இலென்; வென்றும்இலென்; என்றால், தஞ்சம்ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ ? |
|