பக்கம் எண் :

510சுந்தர காண்டம்

5490.

புல்லிய முறுவல் தோன்ற, பொறாமையும் சிறிது
                                 பொங்க,
எல்லை இல்ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி,
‘வல்லையின்அகலா வண்ணம், வானையும் வழியை
                                 மாற்றி,
கொல்லலிர்குரங்கை, நொய்தின் பற்றுதிர்,
                          கொணர்திர்’ என்றான்.

     புல்லிய முறுவர்தோன்ற பொறாமையும் சிறிது  பொங்க -
(இராவணன்) அற்பமான சிறுநகை உண்டாகவும், பொறாமையும் சிறிது மேற்
கிளம்பவும்; எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி -
அளவற்ற வலிமை பெற்ற ஏவலர்கள் எண்ணி்றந்தவர்களை ஏவி அனுப்பி;
வானையும் வழியை - ஆகாய வழியையும்; மாற்றி - தடுத்து; குரங்கை -
அந்தக் குரங்கை; அகலா வண்ணம் வல்லையில் கொல்லலிர் நொய்தின்
பற்றுதிர் கொணர்திர் -
தப்பி அப்புறம் செல்லாதபடி, கொல்லாமல்
விரைவில்,எளிதாக, பிடித்துக் கொண்டு வாருங்கள்; என்றான் - என்று
கூறினான்.

     இராவணன்பொறாமைக்குக் காரணம், அவனது அந்தப்புரக் கடிகா
குரங்கால் அழிக்கப்பட்டது , நொய்து - எளிது; மெதுவாக.          (2)

கிங்கரர் போருக்குவிரைதல்

5491.

சூலம்,வாள், முசலம், கூர் வேல், தோமரம், தண்டு,
                                     பிண்டி-
பாலமே முதலாஉள்ள படைக்கலம் பரித்த கையர்;
ஆலமே அனையமெய்யர்; அகலிடம் அழிவு செய்யும்
காலம்மேல்எழுந்த மூரிக் கடல் என, கடிது செல்வார்.

     சூலம்....படைக்கலம் பரித்தகையர் - சூலாயுதம், முதலிய
பலவகையான போர்க் கருவிகளைத் தாங்கிய கையர்களாகவும்; ஆலமே
அனைய மெய்யர் -
விஷத்தை ஒத்த கறுத்த உடலை உடையவராகவும்
உள்ள அரக்கர்கள்; அகலிடம் அழிவு செய்யும் காலம் - பூமிப்பரப்பு
முழுவதையும் அழித்து விடுதலை உடைய பிரளய காலத்தில்; மேல் எழுந்த
மூரிக் கடல் என -
பொங்கிக் கிளம்பிய வலிய கடல் போல; கடிது
செல்வார் -
விரைந்து போவாராயினர்.