அவிந்தனர் என்றார் -அந்தக்குரங்கினால் போரில் அழிந்து ஒழிந்தனர் என்று கூறினார். ‘புலம் தெரிபொய்க் கரி புகலும் புன் கணார் குலங்கள் ஒழிதல்’ - உவமை. ஒழுக்கத்தை வற்புறுத்துவது. (58) இராவணன் மீட்டும்வினாவுதல் 5547. | ஏவலின்எய்தினர் இருந்த எண் திசைத் தேவரைநோக்கினான், நாணும் சிந்தையான்; ‘யாவது என்றுஅறிந்திலிர் போலுமால் ?’ என்றான்- மூவகை உலகையும்விழுங்க மூள்கின்றான். |
மூவகை உலகையும்விழுங்க மூள்கின்றான் - மேல் கீழ் நடு என்ற மூன்று உலகங்களையும் விழுங்குவான் போன்று சினத்தால் மிக்க இராவணன்; ஏவலின் எய்தினர் இருந்த எண் திசைத் தேவரை நோக்கினான் - தன் கட்டளையால் வந்தவர்களாய் அருகே நின்று கொண்டிருந்த எட்டுத் திக்குப் பாலர்களைப் பார்த்து; நாணும் சிந்தையான் - மிகவும் வெட்கம் கொண்ட மனமுடையவனாகி; யாவது என்று அறிந்திலிர் போலும் என்றான் - (பருவத்தேவர்களைப் பார்த்து) என்ன நடந்தது என்றே தெரிந்து கொள்ளவில்லை போலும் என்று அதட்டிக் கூறினான். (59) 5548. | மீட்டுஅவர் உரைத்திலர்;பயத்தின் விம்முவார்; தோட்டு அலர் இனமலர்த் தொங்கல் மோலியான், ‘வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை, கேட்டதோ ?கண்டதோ ? கிளத்துவீர்’ என்றான். |
அவர் மீட்டுஉரைத்திலர் - அந்த வனத்து நாயகர்,மறுமொழி கூறாதவர்களாய்; பயத்தின் விம்முவார் - அச்சத்தினால் நடுங்குபவரானார்கள்; தோடு அலர் இனம் மலர் தொங்கல் மோலியான் - இதழ்களோடு விரிந்த பலவகை மலர்களால் தொடுத்த மாலையணிந்த முடிகளை உடைய இராவணன்; அரக்கரை வீட்டியது என்னும் வெவ் உரை - (அந்தக் குரங்கு) அரக்க வீரரைக் கொன்று விட்டது என்ற கொடிய வார்த்தை; கேட்டதோ ? கண்டதோ ? கிளத்துவீர் என்றான் - நீங்கள் கேட்டுச் சொன்னதா ? அன்றி, பார்த்துச் சொன்னதா ? சொல்லுங்கள் என்று மீட்டும் கேட்டான். (60) |