9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
இராவணனின் ஐந்துபடைத் தலைவர்களையும் அனுமன் அழித்ததைக் கூறுவது இந்தப் படலம். சேனைத்தலைவர் ஐவர் வேண்டுகோளும் இராவணன் இசைவும் கலித்துறை 5601. | சிலந்திஉண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல், திறலோய் ! கலந்த போரில்நின் கண்புலக் கடுங் கனல் கதுவ, உலந்த மால் வரைஅருவி ஆறு ஒழுக்கு அற்ற ஒக்கப் புலர்ந்த மாமதம் பூக்கும் அன்றே, திசைப் பூட்கை ? |
திறலோய் - (சேனைத் தலைவர் இராவணனை நோக்கி) வலிமை வாய்ந்தவனே! (நீ); சிலந்தி உண்பது ஓர் குரங்கின் மேல் சேறியேல் - சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு குரங்கின் மேல் போர் செய்யப் போவாயானால்; திசைப் பூட்கை - எட்டுத் திக்கு யானைகள்; கலந்த போரில்- நீ எதிர்த்துப் புரிந்த போரில்; நின் கண் புலன் - உனது கண்களிலிருந்து;கடும் கனல் கதுவ - கொடிய நெருப்புப் பொறி பறக்க; உலந்த மால் வரை- கோடை வெயிலால் காய்ந்து போன பெரிய மலையில்; அருவி ஆறுஒழுக்கு அற்று ஒக்க - அருவிகள் தம் வழியே செல்லும் ஓட்டம் அற்றுப்போனது போல; புலர்ந்த மாமதம் - (உன்னால் அடிபட்டு வலிமைகுறைந்தமையால்) அற்றுப் போன மிக்க மதநீர்; பூக்கும் அன்றே - மீண்டும்தோன்றப் பெறும் அல்லவா ? அருவி ஆறுவற்றிப் போன மலைக்கு மதம் அடங்கிய திக்கு யானைகள் உவமை. ஒரு குரங்கை எதிர்த்து இராவணன் போருக்குச் சென்றால், அது அவனது ஆற்றலின் குறைவைத் தெரிவிக்கும். முன் தோற்ற அந்த யானைகள், இப்போது அவனை இழிவாகக் கருதி |