பக்கம் எண் :

710சுந்தர காண்டம்

வேடிக்கை பார்க்கவருகின்ற வெற்றியை உடைய இலங்கை நகரில் உள்ள
அரக்கர்கள்; நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது - பெரிதாய் முழக்கும்
ஆரவார ஒலி; கண்டம் உற்று உள - (அனுமனால் போரில்) கழுத்து
அறுபட்டு அழிவடைந்துள்ள; அரும் கணவர்க்கு ஏங்கிய குண்டல
முகத்தியர்க்கு -
தமது அரிய கணவர்களுக்காக ஏக்கமுற்று வருந்திய,
குண்டலம் விளங்கும் முகத்தை உடைய அரக்கமகளிர்க்கு; உவகை கூர -
மகிழ்ச்சி மேலோங்கிவர,; அண்டம் உற்றது - உலகம் முழுதும் பரவிற்று.

    தம்கணவன்மார்களைக் கொன்ற அனுமனைக் கட்டி இழுத்து வரும்
செய்தியைக் கண்ட அரக்கர்களது பேரொலியைக் கேட்டதனால், கணவர்களை
இழந்த மகளிர்கள் மகிழ்ந்தனர் என்க.                            (6)

இலங்கையின் அழிவுபாடுகளைக் கண்டவாறு அனுமன் செல்லுதல் 

5811.

வடியுடைக்கனல் படை வயவர், மால் கரி,
கொடியுடைத்தேர், பரி கொண்டு வீசலின்,
இடி படச்சிதைந்த மால் வரையின், இல் எலாம்
பொடிபடக்கிடந்தன கண்டு, போயினான்.

     வடி உடை கனல்படை வயவர் - கூர்மை பொருந்தியநெருப்பைப்
போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்ட போர் வீரர்களையும்; மால்கரி
கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் -
பெரிய யானை, கொடிகட்டிய
தேர், குதிரை ஆகியவற்றை (தான்) கையில் எடுத்து வீசி எறிந்ததனால்;
இடிபட சிதைந்த மால் வரையின் -
இடி விழுதலால் சிதைவுபட்ட பெரிய
மலைகள் போல; பொடி பட கிடந்தன இல் எலாம் - பொடிப் பொடியாக
நொறுங்கிக் கிடந்தனவான இலங்கை நகரத்து வீடுகளை எல்லாம்; கண்டு -
(மகிழ்ச்சியோடு) பார்த்துக் கொண்டே; போயினான் - (அனுமன் அந்நகரத்து
வீதிகளின் வழியாய்ச்) சென்றான்.

     அனுமன் இலங்கைநகரத்து மாளிகைகளின் இடிபாடுகளைப் பார்த்துக்
கொண்டு, மகிழ்ச்சியை வெளிக்காட்டாது வீதி வழியே சென்றான் என்பது
கருத்து.                                                (7)

அனுமனைக் கண்டோர்செயல்

5812.

முயிறுஅலைத்து எழு முது மரத்தின், மொய்ம்பு
                                    தோள்
கயிறுஅலைப்புண்டது கண்டும், காண்கிலாது,