4842. | மணிகள்எத்துணை பெரியவும், மால்திரு மார்பின் அணியும்காசினுக்கு அகன்றன உளஎனல் அரிதால்; திணியும்நல்நெடும் திருநகர், தெய்வமாத் தச்சன் துணிவின்வந்தனன், தொட்டுஅழகு இழைத்தஅத் தொழில்கள் |
எத்துணை பெரியமணிகள் - எவ்வளவு பெரியமாணிக்கங்களும்; மால் - திருமால்; திருமார்பின் அணியும் - அழகிய மார்பில் அணிந்துள்ள; காசினுக்கு அகன்றன உள எனல் - கவுத்துவம் என்னும் மணியைவிடச் சிறந்துள்ளவை உள்ளன என்று கூறுவது இல்லை; (அதைப்போல்) தெய்வமாத் தச்சன் - தேவதச்சன் (மயன்); துணிவின் வந்தனன் - உறுதியுடன் வந்து; தொட்டு அழகு இழைத்த - (பிறரை ஏவாமல்) தன் கையில் தொட்டு; அத்தொழில்கள் - செய்த வேலைப்பாடுகள்; நல்நெடுந்திருநகர் - நல்ல பெரிய இலங்கையில்; திணியும் - (ஒப்பற்றுச்) செறிந்திருக்கும். அதுபோல் எனும்உவமஉருபு மறைந்துள்ளமையால் எடுத்துக் காட்டுவமையணி. காசு - மணி. தெய்வமாத்தச்சன் - மயன். விசுவகன்மன் என்றும் கூறலாம். இந்தக் கவி ‘அன்மயப் பொருள்’ என்பது பழைய உரை. அன்மயம் - கொண்டுகூட்டுப் பொருள்கோள். (8) 4843. | மரம்அடங்கலும் கற்பகம்; மனைஎலாம் கனகம்; அரம டந்தையர்சிலதியர் அரக்கியர்க்கு; அமரர் உரம்மடங்கிவந்து உழையராய் உழல்குவர்; ஒருவர் தரம் அடங்குவதுஅன்றுஇது; தவம்செய்த தவமால். |
மரம்அடங்கலும் -(இலங்கையில்) எல்லா மரங்களும்; கற்பகம் - கற்பக மரங்கள்; மனை எலாம் - எல்லா வீடுகளும்; கனகம் - பொன்னால் கட்டப்பட்டவை; அரக்கியர்க்கு - அரக்கப் பெண்களுக்கு; சிலதியர் அரமடந்தையர் - தொண்டு புரிபவர் தேவமகளிர்; (அரக்கர்களுக்கு) அமரர்- தேவர்கள்; உரம்மடங்கி வந்து - வலிமை ஒடுங்கி (அரக்கர் வீட்டுக்கு)வந்து; உழையராய் உழல்குவர் - பணியாளராய் வருந்துபவர்கள்; இது -இந்தச்சிறப்புகள்; ஒருவர் தரம் அடங்குவது அன்று - ஒருவனுடைய தகுதியால் வந்து சேர்வது அன்று; தவம் செய்த - தவங்கள் எல்லாம் கூடிச் செய்த; தவமால் - தவத்தின் பயனாகும். |