பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்819

6000.

மஞ்சு உறழ்மேனியர் வன் தோள்
மொய்ம்பினர்வீரர் முடிந்தார்
ஐம்பதினாயிரர்;அல்லார்,
பைம் புனல் வேலைபடிந்தார்.

     மஞ்சு உறழ்மேனியர் - மேகம் போன்றகருநிறம் கொண்ட உடலை
உடையவர்களும்; வன் தோள் மொய்ம்பினர் - வலிய தோள்களும்
ஆற்றலும் கொண்டவர்களுமான; வீரர் - படை வீரர்களில்; ஐம்பதினாயிரர்
முடிந்தார் -
ஐம்பதினாயிரம் பேர் இறந்தார்கள்; அல்லார் பைம்புனல்
வேலை படிந்தார் -
அவர்கள் அல்லாதவர் எல்லாம் பசுமையாகக்
காணப்படுகின்ற நீரையுடைய கடலில் போய் விழுந்தார்கள்.           (58)

6001.

தோய்த்தனன் வால்; அது தோயக்
காய்ச்சின வேலைகலந்தார்,
போய்ச் சிலர்பொன்றினர் போனார்
‘ஏச்சு’ என,மைந்தர் எதிர்ந்தார்.

     வால்தோய்த்தனன் - அனுமன் தனது வாலைக்கடலில் தோய்த்தான்;
அது தோய -
(நெருப்பு பிடித்த) அந்த வாலைத் தோய்த்ததினால்; காய்ச்சின
வேலை போய் கலந்தார் சிலர் -
கொதிப்படைந்த கடலில் சென்று
முழுகியவர்களில் சிலர்; பொன்றினர் போனார் மைந்தர் -
இறந்தொழிந்தார்கள் (சில இறவாது நின்ற) வீரர்கள்; ஏச்சு என - (இவ்வாறு
கடலில் மூழ்குவது) நமக்கு இழிவு என்று கருதி; எதிர்ந்தார் - அனுமனை
எதிர்த்தார்கள்.

      மைந்தர் -வலிமை உடையவர்; வீரர்.                    (59)

6002.

சுற்றின தேரினர் தோலா
வில் தொழில்வீரம் விளைத்தார்;
எற்றினன்மாருதி; எற்ற,
உற்று எழுவோரும்உலந்தார்.

     சுற்றின தேரினர்- அனுமனைச் சூழ்ந்து கொண்ட தேர் ஏறிய
வீரர்கள்;தோலா வில் தொழில் வீரம் விளைத்தார் - தோல்வி அடையாத
தம்விற்போர்த் தொழிலில் வீரத்தைக் காட்டிப் போர் செய்தார்கள்; மாருதி
எற்றினன் -
அனுமன் அவர்களைத் தாக்கி