பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்825

தேனைச் சிந்திக்கொண்டிருக்கும் மகேந்திரமலையிலே; குதியும் கொண்டான்
-
குதித்தலையுஞ் செய்தான்.

     பாம்பு, ஒன்றைஆவலோடு எதிர் பார்க்கும் போது, படம் எடுத்துக்
கொண்டு எழுந்து நோக்கும் இயல்புடையது. அதனால் வானர வீரர்கள்
அனுமனது வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதற்கு, பை நாகம்
உவமையாக்கப்பட்டது. கணத்தின் காலை   - காலத்தின் சிறிய அளவு; நாகம்
- சுரபுன்னை. அனுமன், கடல் தாவிய செய்தி, ஒரு நீண்ட படலமாக விரிந்தது.
ஆனால் அவன் திரும்பிய செய்தி இரண்டு பாடல்களில் முடிக்கப்பட்டுள்ளது.
இது, கவிச்சக்கரவர்த்தியின் கதை அமைப்புத் திறனைக்காட்டுகின்றது.     (2)

வானர வீரர்அனுமனைக் கண்டு மகிழ்தல் 

6009.

போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல்
                             பொங்க,
வாய் வெரீஇநின்ற வென்றி வானர வீரர் மன்னோ,
பாய்வரு நீளத்துஆங்கண் இருந்தன பறவைப்
                             பார்ப்புத்
தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார்
                             அம்மா !

     வாய் வெரீ இநின்ற வானர வென்றி வீரர் - (அனுமன் நிலை
யாதாகுமோ என்ற அச்சத்துடன்) வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்த
வெற்றிக்குரிய (அங்கதன் முதலிய) வானர வீரர்கள்; போய் வரும் கருமம்
முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க -
(பிராட்டியை அனுமன் தேடிக்
கண்டு பிடித்து) மீண்டு வருதலாகிய தம் செயல் முற்றுப் பெற்றது
என்பதனாலாகிய ஒப்பற்ற மகிழ்ச்சி அதிகப்பட; பாய் வரு நீளத்து ஆங்கண்
இருந்தன பறவைப் பார்ப்பு -
(தாய்ப்பறவை ஆவலோடு) பாய்ந்து உட்புக
வரும் கூட்டினிடத்து இருந்தனவாகிய பறவைக்குஞ்சுகள்; தாய் வர கண்டது
அன்ன -
தமது தாய்ப் பறவை (வெளியிற் சென்றது) மீண்டு வர, (அதனைப்)
பார்த்ததைப் போன்ற; உவகையின் தளிர்த்தார் - மகிழ்ச்சியினால் உடல்
பூரித்தார்கள்.

     வானர வீரர்,பொம்மல் பொங்க உவகையின் தளிர்த்தார் என்க.
வீரர்களது மகிழ்ச்சிக்கு, தாய்ப் பறவையின் வருகை கண்டு மகிழும் பறவைக்
குஞ்சுகளின் உவகை உவமையாக்கப்பட்டுள்ளது. பொம்மல் - மகிழ்ச்சி; நீளம்
- கூடு.                                                   (3)