பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 27

போர் புரியும் செயலை; என் வயின் ஈகலாது- என்னிடம்
தராமல் விட்டது; என்றான்.
 

தவ்வுதல்-தவறுதல். ஈகலாதது என்பது ஈகலாது என்று
தொகுக்கப்பட்டது விகாரம். 'இவ்வினை' என்றது இராம,
இலக்குவர்களையும், வானர சேனையையும் அழித்து வர
அனுப்பும் பணி.
 

(30)
 
 

துன்முகன் உரை
 

6101.

'நில், நில்' என்று, அவன்தனை விலக்கி, 'நீ இவை
என் முனும் எளியர்போல் இருத்தியோ?' எனா,
மன் முகம் நோக்கினன், வணங்கி, வன்மையால்,
துன்முகன் என்பவன், இனைய சொல்லினான்:
 

துன்முகன் என்பவன் நில் நில் என்று அவன்தனை விலக்கி-
துன்முகன்,   நில்  நில்  என்று  அந்த  வச்சிரதந்தனை   விலக்கி;
நீ இவை என்முனும் எளியர் போல் இருத்தியோ- (இராவணனை
வணங்கி)  நீ   இத்தகைய    சொற்களை    எனக்கு    முன்னால்
எளியவரைப்   போலக் கூறி  இருக்கப் போமோ? எனா, மன்முகம்
நோக்கினன் வணங்கி
- என்று கூறி, அரசனான அவனை வணங்கி,
நோக்கி;   வன்மையால் -  தனது   வலிமை   புலப்பட   (சினம்
கொண்டு), இனைய சொல்லினான் - இவ்விதமாகப் பேசலானான். 
 

அவன்-வச்சிரதந்தன், மன் - அரசன்  (இராவணன்)  என்றது
பின்னர் கூறுவனவற்றை. 'அடியவர் முன் தலைவர் குறை புலப்பட
பேசுதல்   கூடாது'   என்பதால்   'என்முனும் எளியர்   போல்
இருத்தியோ' என்றான். 
 

(31)
 

6102.

'திக்கயம் வலி இல; தேவர் மெல்லியர்;
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது;
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்,
அக்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே!
 

திக்கயம் வலியில- (இராவணனுக்கு) திக்கு யானைகள் வலிமை
இல்லாதவாயின; தேவர்   மெல்லியர்   -  தேவர்களும் தோற்று
மெலிந்தனர்; முக்கணான் கயிலையும் -  முக்கண்   மூர்த்தியான
சிவபிரான்   வாழும் கைலாயமலையும்; முரண் இன்று ஆயது -
வலிமை இல்லாதது ஆயிற்று; மக்களும் குரங்குமே -