6178. | 'நீலகண்டனும் நேமியும் நேர் நின்று நேரின், |
| ஏலும் அன்னவருடை வலி அவன்வயின் எய்தும்; |
| சாலும் நல் வரம் நினைந்து, அவன் எதிர் செலல் |
| தவிர்ந்து, |
| வாலிதன்னை, அம் மனிதனும், மறைந்து நின்று எய்தான். |
|
நீலகண்டனும் - நீல நிறமான கழுத்தை உடைய சிவனும்; நேமியும் - சக்கராயுதத்தை உடைய திருமாலும்; நேர் நின்று நேரின் - நேருக்கு நேர் நின்று பொருதால்; ஏலும் அன்னவருடை வலி - எதிர்க்கும் அவர்களது வலிமையும்; அவன் வயின் எய்தும் - அந்த வாலியிடம் சேர்ந்து விடும்; சாலும் நல்வரம் நினைந்து - மிக்க அந்த நல்ல வரத்தை நினைத்தே; அம்மனிதனும் - நீ சொன்ன அந்த மனிதனாகிய இராமனும்; அவன் எதிர் செலல் தவிர்ந்து - அவனுக்கு எதிரிலே சென்று நின்று போரிடுவதைத் தவிர்த்து; வாலிதன்னை - அந்த வாலியை; மறைந்து நின்று எய்தான்- மறைந்து நின்று அம்பெய்து கொன்றான். |
நேமி-சக்கரம், இங்கு அப் படை கொண்ட திருமாலைக் குறித்து நின்றது. நேரின்-எதிர்த்தால் ஏலும்-எதிர்க்கும். எதிர்த்தவர் பலத்தில் பாதி வாலிபால் எய்தும் என்பதனை "கிட்டினார் பொரக்கிடைக்கின் அன்னவர் பட்ட நல்வலம் பாதி எய்துவான்" (3825) என்று முன்னும் கூறுதல் காணலாம். |
(108) |
6179. | 'ஊன வில் இறுத்து, ஓட்டை மா மரத்துள் அம்பு |
| ஓட்டி, |
| கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து, உயர் வனம் குறுகி, |
| யான் இழைத்திட இல் இழந்து, இன் உயிர் சுமக்கும் |
| மானுடன் வலி, நீ அலாது, யார் உளர் மதித்தார் ?' |
|
ஊனவில் இறுத்து - ஏற்கனவே ஊனமான வில்லை முறித்து; ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டி - ஓட்டை மரத்திலே அம்பு செலுத்தி; கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து - கூனி செய்த சூழ்ச்சியினால் ஆட்சியை இழந்து;உயர்வனம் குறுகி - உயர்ந்த மரங்கள் நிறைந்த வனம் அடைந்து; யான் இழைத்திட இல் இழந்து- நான் செய்த செயலால் மனைவியை இழந்து; இன் உயிர் சுமக்கும் - இன்னுயிரைச் சுமந்து திரியும்; மானுடன் வலி - ஒரு மனிதனுடைய வலிமையை;நீ அலாது - உன்னை அல்லாமல்; யார் உளர் மதித்தார் - மதித்தவர்கள் வேறு யாருள்ளார்? |