6192. | 'வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று |
| மருவான்; |
| கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை |
| குடையான்; |
| பண்டைத் தெண் திரைப் பரவை நீர் உவர் என்று |
| படியான்; |
| அண்டத்தைப் பொதுத்து, அப் புறத்து அப்பினால் |
| ஆடும். |
|
வண்டல் தெண் திரை ஆற்று நீர் - வண்டலோடு கூடிய, தெளிந்த அலைகளையுடைய ஆற்று நீர்; சில என்று மருவான் - அளவில் சிறியதென்று அதன்பக்கம் செல்லான்; கொண்டல் கொண்டநீர் - மேகம் கொண்ட மழை நீரை; குளிர்ப்பு இல என்று அவை குடையான் - குளிர்ச்சி இல்லை என்று அதில் குளிக்க மாட்டான்; பண்டைத் தெண் திரைப் பரவை நீர் - பழமைவாய்ந்த தெளிந்த அலைகளை உடையகடல் நீர்; உவர் என்று படியான் - உப்புச்சுவையுடையது என்று குளிக்க மாட்டான்;அண்டத்தைப் பொதுத்து - அண்டத்தைத் துளை செய்து;அப்புறத்து அப்பினால் ஆடும்- பெரும்புறக் கடல் நீரால் நீராடுவான். |
"பண்டைத் தெண்திரைப் பரவை" கடலின் பழமையை உணர்த்தும் "தொன்று முதிர் பௌவம்" (புறம்-6) என்றது காண்க. பொதுத்தல் - துளைத்தல். |
(4) |
6193. | 'மரபின், மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி, |
| அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி, |
| பரவும் இந்திரன் பதியிடைப் பகற் பொழுது அகற்றி, |
| இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும். |
|
மரபின் மாபெரும் புறக்கடல் - விதிப்படி பெரும் புறக் கடல் நீரிலே; மஞ்சனம் மருவி - (காலையிலே) நீராடி (முடித்துப்பின்); அரவின் நாட்டிடை - நாகலோகத்திலே; மகளிரொடு இன் அமுது அருந்தி - நாக கன்னியருடனே இனிய உணவை உண்டு; பரவும் இந்திரன் பதியிடை - எல்லோராலும் போற்றப்படும் இந்திரன் உலகத்திலே; பகல் பொழுது அகற்றி - பகல் பொழுதைக் கழித்து; இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் - இரவு நேரத்திலே பிரமன் உலகமான சத்தியலோகத்திலே கொலுவீற்றிருப்பான். |