பக்கம் எண் :

288யுத்த காண்டம் 

மூழ்குபவர்கள்; பாவம் ஐந்தும் நீங்கி -  பாவங்கள்   ஐந்தும்
நீங்கப்பெற்றவராய்; மேல் அமரர் ஆவார் - விண்ணுலகத்துத்
தேவர்கள் ஆவார் என்றால்; சூடுவார் எய்தும்  தன்மை -
அந்தத் திருவடிகளைத்  தலையில்   சூடிக்   கொள்பவர்களின்
சிறந்த தன்மையை; யாவர் சொல்லுவார்   சொல்லீர் - யார்
சொல்ல வல்லவர் சொல்லுங்கள்.
 

தேடுவார்-பரமனது பாதத்துணையைத்  தேடும்   பக்தரும்,
ஞானிகளுமாவார். தேடநின்ற   சேவடி-அத்தகைய ஞானிகளும்
இன்றும்   அடைய   இயலாத  திருவடிகள் என்பது பொருள்.
அன்று-திருமால் திருவிக்கிரம் அவதாரம் செய்த காரணம்.
 

(150)
 

6515.

'இற்றை நாள் அளவும், யாரும், இருடிகள், 

இமையோர், ஞானம்

முற்றினார், அன்பு பூண்டார், வேள்விகள் முடித்து

நின்றார்,

மற்று மா தவரும், எல்லாம், வாள் எயிற்று இலங்கை

வேந்தன்

பெற்றது ஆர் பெற்றார்!' என்று வியந்தனர், 

பெரியோர் எல்லாம்.

 

பெரியோர்   எல்லாம் - வீடணன்   பெற்ற பெருமையை
உணர்ந்த   உலகத்துப்   பெரியவர்கள் எல்லாம்; இற்றை நாள்
அளவும்
-   இந்த   நாள்   வரையும்; இருடிகள், இமையோர்
யாரும்
-   முனிவர்களும்,   தேவர்களும்   எவரும்;   ஞானம்
முற்றினார் அன்பு   பூண்டார்
- ஞானத்தில் முதிர்ந்தவர்கள்,
பக்தி பூண்டு ஒழுகுபவர்கள்; வேள்விகள் முடித்து நின்றார்-
சிறந்த  வேள்விகளைச்   செய்து  நிறைவேற்றியவர்கள்; மற்று
மாதவரும்  எல்லாம்
- மற்றும்  சிறந்த தவமுடைய யாவரும்
ஆகிய இத்தகைய   யாவரும்;   வாள்   எயிற்று இலங்கை
வேந்தன்
- ஒளிபொருந்திய பற்களை உடைய இந்த இலங்கை
வேந்தனான வீடணன்; பெற்றது  ஆர் பெற்றார் -  இந்தப்
பேற்றினை யார் பெற்றார்கள்;   என்று  வியந்தனர் - என்று
கூறி வியப்படைந்தார்கள்.
 

இருடிகள்-முனிவர்கள்  (ரிஷி  என்ற வடசொல்லின் தமிழ்
வடிவம்) இமையோர்-தேவர்.  ஞானம்   முற்றினார்-ஞானத்தில்
சிறந்த   ஞானிகள்   அன்பு   பூண்டார்-பக்தி   மிக்கவர்கள்.
அரக்கனாய்ப் பிறந்தும் சிறந்த   பேறு பெற்றான்   என்பதால்
வீடணன்   'வாள்   எயிற்று   இலங்கை   வேந்தன்'   எனக் 
குறிப்பிட்டார்.
 

(151)