பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 385

வருணனுக்குச்    சீதைக்கு   நேர்ந்த   துன்பமும்   தெரியாது.
இராமபிரான்  வருமாறு   வேண்டியதும்  தெரியாது  என்பதனை
'புகுந்தது ஒன்றும்  அறிந்திலேன்' என்றான். நீ  இப்போது கூறிய
உனது வார்த்தையால்தான் தெரிந்தேன் என்பதனை 'வார்த்தையின்
அறிந்த தல்லால்' என்றான் ஒருவேளை தேவர்கள் எவரையாவது
சந்தித்திருந்தால் அவர்கள் கூறக்கேட்டிருக்கலாம்  என இராமன்
கருதக் கூடும்  என்பதால் 'தேவர்  பால்  வந்திலேன்  என்றான்.
தீர்த்தன் -  தூய்மையானவன்.  மீனின் போர்த்  தொழில் - சுறா
மீன்கள் தங்களுக்குள்ளே போரிட்ட செயல்.
 

(76)
 

இராமபிரான் அம்புக்கு இலக்கு யாதென வருணன் கூறுதல்
 

6665.

என்றலும், இரங்கி, ஐயன், 'இத் திறம் நிற்க; இந்தப்

பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என்?

புகறி'என்ன,

'நன்று' என வருணன்தானும், 'உலகத்து நலிவு தீர,

குன்று என உயர்ந்த தோளாய்! கூறுவல்' என்று

கூறும்:

 

என்றலும்   இரங்கி  ஐயன்- என்று   வருணன்   கூறக்
கேட்டதும் இராமபிரான் இரக்கம் கொண்டு வருணனை நோக்கி;
இத்திறம் நிற்க- இது இவ்வாறு இருக்கட்டும் (இனி நடப்பதைப்
பார்ப்போம்);  இந்தப்  பொன்றல்  இல்பகழிக்கு-   வில்லில்
பூட்டிய இந்த அழிவில்லாத  அம்புக்கு  (வீணாகப்  போகாமல்);
அப்பால் இலக்கம்  என்  புகறி என்ன- இலக்கு யாதென்று
கூறுவாயாக  என்று  வினவ; நன்று  என வருணன்  தானும்-
நல்லது என்று வருணனும் ராமனை நோக்கி; குன்றென உயர்ந்த
தோளாய்
-  மலை  போன்ற   உயர்ந்த   தோள்களை  உடைய
பெருமானே;    உலகத்து   நலிவு   தீர -    இவ்வுலகத்தின்
துன்பமெல்லாம்  தீரும்படி; கூறுவல்  என்று கூறும்- அம்புக்கு
இலக்கம் யாதெனக் கூறுவேன் என்று சொல்லலானான்.
 

பொன்றுதல் - அழிதல். வருணன்  மீது  எய்வதற்கு வில்லில்
பூட்டிய அம்பு வீணாகக் கூடாது. வருணன் 'அபயம்' என்று கூறிச்
சரணடைந்து விட்டான் எனவே அம்புக்கு வேறு இலக்கு ஏதேனும்
வேண்டும்.   பொன்றுதலில்லா  அம்பு  அல்லவா? பரசுராமனிடம்
வில்லை வாங்கி அம்பு   பூட்டி இலக்கம்  கேட்டது போல (1298)
'பகழிக்கு அப்பால்  இலக்கம் என்'  என்று  இராமபிரான் கேட்க,
உலகத்தின்   துன்பம்   தீர,  கூறுவேன்   என்று   கூறலானான்.
உலகத்தை நலிவு செய்து