பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 391

எந்தாய்- என்  தந்தையே; கல்  என வலித்து  நிற்பின்-
கடல்   நீரைக்   கல்லைப்   போலக்   கடினமாக்கி   நின்றால்;
கணக்கிலா உயிர்கள் எல்லாம் ஒல்லையில் உலந்து வீயும்-
கடலில்   வாழும்   கணக்கில்லாத  உயிரினங்களெல்லாம்  வாழ
முடியாதபடி விரைவில் இறந்து  படும்; இட்டது  ஒன்று ஒழுகா
வண்ணம்
-  என்னிடம்  இட்டது எதுவும் கீழே ஒழுகிவிடாதபடி;
எல்லையில்   காலமெல்லாம்   ஏந்துவன்-   அளவில்லாத
காலமெல்லாம்    தாங்கி   ஏந்திக்    கொண்டிருப்பேன்  என்
சிரத்தின் மேலாய்
-  எனது  தலையின்  மீதாக; சேது என்று
ஒன்று இயற்றி
-  அணை  என்ற  ஒன்றை  இயற்றி;  இனிதின்
செல்லுதி
- அதன் வழியாக இனிதே செல்லுவாயாக (என்றான்)
 

(84)
 

இராமபிரான் சேதுகட்டப் பணித்தல்
 

6673.

'நன்று, இது புரிதும் அன்றே; நளிர் கடல் பெருமை

நம்மால்

இன்று இது தீரும் என்னில், எளிவரும் பூதம்

எல்லாம்;

குன்று கொண்டு அடுக்கி, சேது குயிற்றுதிர்' என்று

கூறிச்

சென்றனன், இருக்கை நோக்கி; வருணனும்

அருளின் சென்றான்.

 

நன்று இது புரிதும்- நல்லது  இதைச்  செய்வோம்  என்று
கூறிய இராமபிரான்; நம்மால்  நளிர்கடல் பெருமை- கடல்மீது
அணைகட்டுவோமானால்,     நம்மால்    இந்தக்     குளிர்ந்த
கடலுக்குள்ள பெருமை; இன்று  இது  தீரும் என்னில்-  நாம்
அணைகட்டிக் கடந்து  செல்வதால்  தீருமாயின்; பூதமெல்லாம்
எளிவரும்
- மற்ற  நான்கு  பூதங்களும்  நமக்கு எளிமைப்படும்;
குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர்- குன்றுகளைக்
கொண்டு வந்து அடுக்கிக் கடலின்மீது அணைகட்டுங்கள்; என்று
கூறிச் சென்றனன் இருக்கை
-  என்று வானர   வீரர்களுக்குப்
பணித்து விட்டுத் தனது இருப்பிடம் செல்லலானான்; வருணனும்
அருனின் சென்றான்
-  வருணனும்  இராமபிரானது அருளுக்கு
உரியவனாகி (விடைபெற்றுச்) சென்றான்.