பக்கம் எண் :

394யுத்த காண்டம் 

கவிக்கு நாயகன்- வானரசேனையின்  அரசனான சுக்கிரீவன்;
அரக்கர்  கோமகற்கு   இளவலும்  இனிது  உடன் இருக்க-
அரக்கவேந்தனான இராவணனுக்குத் தம்பியான வீடணனும் இனிதே
உடனிருக்க; அளவறும்  அறிஞரோடு எண்ணினான்- அளவற்ற
அறிஞர்களான சாம்பன்  அனுமன்,  அங்கதன்  ஆகியவர்களுடன்
கலந்து  ஆலோசித்தான் பின்னர்; விளைவன விதிமுறை முடிக்க
வேண்டுவான்
-இனி நிகழ வேண்டியவற்றை முறைப்படி நிறைவேற்ற
வேண்டி; நளன்  வருக என்றனன்- அதற்கேற்றவன் நளனே என
முடிவு செய்து நளனை வருமாறு பணித்தான்.
 

கவிக்கு நாயகன் - சுக்கிரீவன். இதே தொடர் முன்னர் ஊர்தேடு
படலத்தில் (4966) அனுமனைக் குறிக்கவந்தது. அங்கே அனுமனுக்குத்
தலைமை  (நாயகன்)   பாகவதத்திறத்தாலும் கைங்கரியத் திறத்தாலும்;
இங்கே சுக்கிரீவனுக்குத்    தலைமை   (மகாராஜா   என  வைணவ
சம்பிரதாயம்    குறிக்கும்)   ஆட்சி   பீடத்தால்" சேது  கட்டுதலை
நிறைவேற்றுதற்கு   உரியவன்   நளனே   என்பதால்  'நளன்  வருக
என்றனன். நளன் தெய்வதச்சன் விசுவகர்மாவின் மகன்.
 

(1)
 

சேதுகட்ட நளன் உடன்படுதல்
 

6675.

வந்தனன், வானரத் தச்சன்; 'மன்ன! நின்
சிந்தனை என்?' என, 'செறி திரைக் கடல்
பந்தனை செய்குதல் பணி நமக்கு' என,
நிந்தனை இலாதவன் செய்ய நேர்ந்தனன்.
 

வந்தனன்   வானரத்   தச்சன்-  வானரத்தச்சனான  நளன்
சுக்கிரீவனது ஆணைப்படி அங்கு வந்தான் வந்தவன்; மன்ன! நின்
சிந்தனை என் என
-  சுக்கிரீவனை   நோக்கி,  அரசே!   என்னை
அழைத்த  உனது கருத்து என்ன என்று கேட்க; செறிதிரைக்கடல்-
செறிந்த    அலைகளை   உடைய   இந்தக்  கடலுக்கு;  பந்தனை
செய்குதல் பணி  நமக்கு  என
- அணை   கட்டுதல்  நமக்குரிய
பணியாகும் என்று சுக்கிரீவன் கூற; நிந்தனை இலாதவன்- பிறரால்
நிந்திக்கப்படாத    தொழில்   வல்லவனாகிய    நளன்;   செய்ய
நேர்ந்தனன்
- அணை கட்டும் பணியைச் செய்ய உடன்பட்டான்.
 

நளன்   வானரச் சிற்பி இவனைப் பற்றி: "வாநரத் தச்சன் மயன்
குமரன்,   இரத்தக்   கண்ணனைக்  கொன்றவன்,   விச்வகர்மனாற்
பிறந்தவன், சேது    கட்டினவன்   என   அபிதான    சிந்தாமணி
விவரித்துள்ளது. (பக்.945).