பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 429

சந்திரனுடைய  கிரணங்களைப்  போல; குளிர்  வாய்ந்தன -
குளிர்ந்த தன்மை பொருந்தியனவாயின;
 

எப்போதும்   நீர்த்திவலைகள்   வானத்  தெய்தினமையின்
'நிரந்தரம் எய்தலால்' என்றார்.
 

(62)
 

6736.

நன்கு ஒடித்து, நறுங் கிரி சிந்திய
பொன் கொடித் துவலைப் பொதிந்து ஓடுவ,
வன் கொடிப் பவளங்கள் வயங்கலால்,
மின் பொடித்தது போன்றன, விண் எலாம்.
 

நறுங்கிரி  நன்கு ஒடித்து -  மணம்  மிகுந்த  மலைகளை
நன்றாகப்  பெயர்த்து; சிந்திய பொன் கொடி- (கடலில் எறியும்
போது  சிந்திய   மலையிலுள்ள   பொன்  துகள்களின்  வரிசை;
துவலை   பொதிந்து  ஓடுவ - கடலின் நீர்த்திவலைகளாலே
பொதியப்பட்டு  மேலே  செல்வன; வன்  கொடிப் பவளங்கள்
வயங்கலால் 
-  வலிய  பவளக்  கொடிகளோடு விளங்குவதால்;
விண்   எலாம்   மின்பொடித்தது  போன்றன -  ஆகாய
மெல்லாம் மின்னலைத் தோன்றச் செய்வது போன்றிருந்தது.
 

நல்ல   மணமுடைய  ஏலம்,  கிராம்பு  போன்ற  மலைபடு
பொருள்களால்        மலை       நறுமணம்        கமழும் 
தன்மையுடையதாயிருத்தலின்   'நறுங்கிரி'   என்றார்.  ஒடித்து -
பெயர்த்து.  பொன்   கொடி - பொன்   துகள்களின்  ஒழுங்கு.
பொதிந்து - மூடப்பட்டு. பொடித்தல் - தோன்றுதல்.
 

(63)
 

6737.

ஓடும் ஓட்டரின், ஒன்றின் முன் ஒன்று போய்,
காடும் நாடும், மரங்களும் கற்களும்,
நாடும்; நாட்டும்; நளிர் கடல் நாட்டில், ஓர்
பூடும் ஆட்டல் இலாய, இப் பூமியில்.
 

ஓடும்  ஓட்டரின் - விரைந்தோடும் தூதுவர்களைப் போல;
ஒன்றின்  முன் ஒன்று போய் - வானரங்களை ஒன்றையொன்று
முந்திச்  சென்று; காடும் நாடும்- காடாகிய  முல்லை நிலத்தும்,
நாடாகிய   மருத  நிலத்தும்; மரங்களும்  கற்களும் நாடும் -
மரங்களையும்  கற்களையும்   தேடும்;   நளிர்கடல்   நாட்டில்
நாட்டும்
-  (தேடிக்  கொண்டு  வந்தவைகளை  கடல் நிலமான
நெய்தல்  நிலத்தில்  நிலை   நிறுத்தும்;  இப்பூமியில்-  இந்தப்
பூமியிலே எங்கும்;