பக்கம் எண் :

516யுத்த காண்டம் 

10. இராவணன் வானரத் தானை காண் படலம்
 

இராவணன்,  இலங்கைக்  கோட்டைக்  கோபுரத்தின் மீதேறி,
தன் பரிவாரங்களுடன்  நின்று, இராமனுடைய வானரத்தானையைக்
கண்ணுறுவது பற்றிக் கூறும் பகுதி இப்படலம் ஆயிற்று.
 

இராமனைக்    கண்ணுற்றதும்     இராவணன்    அடைந்த
மெய்ப்பாடுகளும்,   மற்றவர்கள் யார்? யார்?  என   இராவணன்
வினாவலும்   சாரன், அவனுக்கு    இலக்குவன்,   வானரப்படை
வீரர்கள்   முதலியோர்  பற்றி   எடுத்துரைப்பதும் இப்படலத்துள்
அமைந்துள்ளன.
 

கோபுரத்தின் மேல் இராவணன் நின்ற நிலை
 

கலிவிருத்தம்
 

6860.

கவடு உகப் பொருத காய் களிறு அன்னான்,

அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் 

சுவடுடைப் பொரு இல் தோள்கொடு, அனேகம் 

குவடுடைத் தனி ஓர் குன்று என, நின்றான். 

 

கவடு உகப் பொருத- (தன்னைக்) கட்டியிருக்கும் கட்டுத்தறி
முறியும்படி   மோதித்   தாக்கும்;   காய்  களிறு அன்னான் -
சினமுடைய  ஆண்    யானை   போன்ற  இராவணன்;   அவள்
துயக்கின்
- சீதா தேவியின்பால் கொண்ட மையலால்; அம்புற-
மன்மதன் மலர்க்கணைகள் தைத்ததால்; வெம்பும் - வருந்துகின்ற;
சுவடு உடை - தழும்புகளைப் பெற்ற; பொருஇல் தோள் கொடு
- ஒப்பற்ற  தன்  தோள்களோடு;  அனேகம் குவடுஉடை- பல
சிகரங்களையுடைய;  தனி  ஓர் குன்றென  நின்றான் - ஒப்பற்ற 
ஒரு மலை போல (கோபுரம் ஏறி) நின்றான்.
 

முன்பு   ஒழுக்க   பலம்  இருந்த காலை, திக்குயானைகளின்
கொம்பொடிந்தது. இன்று, அது குறைந்த  காலை மலர்க்கணைகள்
துளைக்க  முடிந்தது.  அன்றொரு  சுவடு, இன்றொரு  சுவடு! என
அவனை நுட்பமாகப் பரிகசித்த வாறுமாம்.
 

(1)