(இராமபிரானை) நிமிர் கண்கொடு கண்டான் - (ஆணவம்) ஓங்கிய தன் விழிகளால் பார்த்தான். |
இராவணன், இராமபிரானை முதன்முதலாகச் சந்திக்கும் சந்திப்பு ஆதலால், ஆர்வம் குமிழியிட, "ஆரணத்தை, அரியை, மறை தேடும் காரணத்தை" என அடுக்குகின்றார் கவிஞர் பிரான். இராமபிரானை, வீடணன் சந்தித்த போதும், இவ்வாறே உவகை மிகக்கூர்வார். (6493-98) ஆதலின் "நிமிர் கண் கொடு கண்டான்" என்றார், கொடு-கொண்டு என்பதன் விகாரம். கண்டான் எனவே போதுமாயினும் 'கண்கொடு' என்றது அவன் கண் பெற்ற பேற்றினைச் சுட்டியதாம். |
(17) |
6877. | மடித்த வாயினன்; வழங்கு எரி வந்து |
| பொடித்து இழிந்த விழியன்; அதுபோழ்தின், |
| இடித்த வன் திசை; எரிந்தது நெஞ்சம்; |
| துடித்த, கண்ணினொடு இடத் திரள் தோள்கள். |
|
மடித்த வாயினன்- (இராமபிரானைக். கண்ட இராவணன் எழுந்த வெகுளியால்) உதட்டைக் கடித்த வாயினன் ஆனான்; வயங்கு எரி வந்து - ஒளிர்கின்ற சினத்தீ தோன்றி; பொடித்து இழிந்த விழியன் - சிறுசிறு பொறிகளாய் விழுகின்ற கண்களையுடையவன் ஆனான்; அது போழ்து- அப்பொழுது; வன்திசை இடித்த- வலிய திசைகளில் அவன் சின ஆவேசத்தால் இடி போன்ற ஒலி உண்டாயிற்று; நெஞ்சம் எரிந்தது- (சினத்தால்) அவன் உள்ளம் பற்றி எரிந்தது; கண்ணினோடு - அவன் கண்களோடு சேர்ந்து; இடத்திரள் தோள்கள்- இடப்பக்கத்தே திரண்ட அவன் பத்துத் தோள்களும்; துடித்த - துடித்தன. |
துடித்த -அன்சாரியை பெறாத பலவின்வினை. வாய் மடித்தல்- உதடு கடித்தல். சினத்தின் மெய்ப்பாடு. "மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்த" (3115) சினத்தால் அவன் கண்கள் உலைக்களமாகி, தீப்பொறிகள் சிந்தின என்று அவன் வெகுளியின் உச்சம் விளம்பினார். |
(18) |
6878. | ஆக, ராகவனை அவ்வழி கண்டான்; |
| மாக ராக நிறை வாள் ஒளியோனை |
| ஏக ராசியினின் எய்த எதிர்க்கும் |
| வேக ராகு என, வெம்பி வெகுண்டான். |