பக்கம் எண் :

570யுத்த காண்டம் 

12. அணி வகுப்புப் படலம்
 

மகுட மணிகளை  இழந்த  இராவணன்  சோகத்தால் துயில்
பெறாது மஞ்சத்தில்   புரண்டான். சார்த்தூலன் என்னும் ஒற்றன்
அப்போது     நுழைந்தான்.   வானரப் படைகள் இலங்கையின்
வாயில்கள் தோறும் முற்றுகைக்காகப்   பகிர்ந்தனுப்பப்பட்டுள்ள
செய்தியை    உரைத்தான்      ஒற்றன்.   உடனே, இராவணன்,
அமைச்சர்களோடு ஆய்வு நிகழ்த்தினான். மாலியவான்  மீண்டும்
அறம்   உரைத்தும் வீணாகிறது. இராவணன்  தன் சேனைகளை
அணிவகுத்து    இன்னார்    தலைமையில் இத்தனை வெள்ளம்
சேனையோடு,      இந்த       இந்தத்  திசையில் நிற்க என்று
ஆணையிடுகிறான். இந்நிகழ்ச்சிகளைக் கூறுவது இப்படலம்.
 

இராவணன் மானத்தால் வருந்தித் துயில முயலுதல்
 

6946.

மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான், வதனம்

எல்லாம்

கூனல் தாமரையின் தோன்ற, வான் தொடும்  

கோயில் புக்கான்.

பானத்தான் அல்லன்; தெய்வப் பாடலான் அல்லன்; 

ஆடல்

தானத்தான் அல்லன்; மெல்லென் சயனத்தான்;

 உரையும் தாரான்.

 

மானத்தால்    ஊன்றப்பட்ட  மருமத்தான் - மானம்
என்னும்        வேலால்    ஊன்றித்         தாக்கப்பட்ட
மார்பினையுடையவனான   இராவணன்.  வதனம் எல்லாம் -
முகங்கள் பத்தும்;கூனல்   தாமரையில்  தோன்ற  -  வாடி
வதங்கிய        தாமரைகள் போல் (தலைகவிழ்ந்த வண்ணம்)
தோற்றம் அளிக்க; வான் தொடும் கோயில் புக்கான்- வான
அளவும் தன் அரண்மனைக்குள்   நுழைந்தான்;  பானத்தான்
அல்லன் 
-  (அவ்வாறு நுழைந்த அவன்)  (மகிழ்ச்சி தரும்)
பானங்களைப் பருகவில்லை; தெய்வப் பாடலான் அல்லன்-
தெய்வ இசைப்பாடல்களைக் கேட்டு   மகிழவில்லை; ஆடல்
தானத்தான் அல்லன்
- ஆடல் மகளிர்  ஆடும்   நாட்டிய
சாலைக்கும் செல்ல இல்லை;உரையும் தாரான் -  யாரோடும்
உரைதரவும் இல்லை; மெல்லென் சயனத்தான்- மெத்தென்ற
படுக்கையிற் படுத்துக் கிடப்பதானான்.