பக்கம் எண் :

620யுத்த காண்டம் 

அங்கதன் நால்வர் உயிருண்டு கூறுதல்
 

7013.

ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத்

தாவினான், அவர்தம் தலை போய் அறக் 

கூவினான், அவன், கோபுர வாயிலில் 

தூவினான், துகைத்தான், இவை சொல்லினான்: 

 

ஏவினார்    பிடித்தாரை  -     இவ்வாறு இராவணனால்
ஏவப்பட்டவர்களாய்த் (தன்னைப்) பிடிக்க  வந்த   நால்வரையும்;
எழ எடுத்து தாவினான்
-அந்தரத்தில் தொங்குமாறு அவர்களைப்
பற்றிக்கொண்டு உயரப் பாய்ந்து; அவர் தம் தலை போய் அற-
அவர்கள்   தலைகள்   அற்று     ஒழியச் செய்து;  கூவினான்-
முழக்கமிட்டு;    அவன்    கோபுர   வாசலில்  தூவினான் -
(அவர்களுடல்) இராவணனுடைய அரண்மனைக் கோபுர  வாசலில்
சிதறிவிட்டு; துகைத்தான் - மிதித்தவனாய்; இவைசொல்லினான்-
பின்வரும் சொற்களை மொழிந்தான்.
 

இப்பாடலில்    வெகுளியின்  மெய்ப்பாடுகள் சொல் வடிவம்
பெற்றுள்ளன. ஏவினார்-ஏவப்பட்டவர். செயப்படுபொருள்  வினை.
செய்வினை போல   வந்தது.     செயப்படு பொருளைச் செய்தது
போலத் தொழிற் படக்கிளத்தலும் வழக்கு இயல் மரபே.   (தொல்.
சொல்: 6. 49).
    

(40)
 

7014.

'ஏமம் சார, எளியவர் யாவரும்,

தூமம் கால்வன, வீரன் சுடு சரம், 

வேம் மின் போல்வன, வீழ்வதன் முன்னமே, 

போமின் போமின், புறத்து' என்று போயினான். 

 

தூமம் கால்வன - (பின்பு அங்கிருந்த வீரர்களை நோக்கி)
புகை    கக்குகின்றனவும்;     வேம்    மின்   போல்வன-
கொதிக்கின்ற    மின்னல்களைப்  போல்வனவும் ஆகிய; வீரன்
சுடுசரம்
   -    இராமபிரானுடைய   சுட்டெரிக்கின்ற அம்புகள்;
வீழ்வதன் முன்னமே
-உங்கள் மீது வந்து வீழ்வதன் முன்னமே;
எளியவர் யாவரும்
- வலிமையற்ற நீங்கள் அனைவரும்; ஏமம்
சார
   -   பாதுகாப்பான இடங்களையடையும்படி, (இப்போதே);
புறத்துப்   போமின்  போமின்
   -  அப்பால் செல்லுங்கள்;
செல்லுங்கள்;    என்று போயினான்- என்று சொல்லியவாறே
(இராமபிரான் இருக்குமிடம் சென்றான் அங்கதன்)

(41)