| வண்டு இரிந்தன; வாய்தொறும் முட்டையைக் |
| கொண்டு இரிந்தன, அன்னக் குழாம் எலாம். |
|
தண்டு இருந்த பைந்தாமரை- (அகழி தூர்க்கப் படுகையில்) தண்டுகளோடு இருந்த பசிய தாமரைக் கொடிகள்; தாள் அற- வேர் பறிக்கப்பட்டதனால்; படர்சிறை வண்டு-(அங்கிருந்த) விரிந்த சிறகுகளையுடைய வண்டுகள்; பண்திரிந்து சிதைய இரிந்தன- தம்ரீங்கார இன்னிசை நிலைதிரியுமாறு ஓடின; அன்னக் குழாம் எலாம் - அன்னப் பறவைக் கூட்டங்கள் எல்லாம்; வாய்தொறும் முட்டையைக் கொண்டு இரிந்தன- (தம்) வாய்கள் தோறும் முட்டைகளைக் கவ்விக் கொண்டு நிலைகெட்டு ஓடின. |
(8) |
7025. | ஈளி தாரம் இயம்பிய வண்டுகள் |
| பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய; |
| தாள தாமரை அன்னங்கள் தாவிட, |
| வாளை தாவின, வானரம் தாவவே. |
|
ஈளிதாரம் இயம்பிய வண்டுகள்- இளி, தாரம் எனும் பண் இசைகளை இசைக்கும் வண்டுகளுடன்; பாலை தாது உகு நெடுநீர்ப் பண்ணைய- (தென்னை, கழுகு முதலியவற்றின்) பாளையினுடைய மகரந்தங்கள் சிந்துகின்ற நீரினையுடைய பெரிய வயல்களில் உள்ள; தாள தாமரை அன்னங்கள்- தாள் உள்ள தாமரை மலர்களில் வாழ்கின்ற அன்னங்கள்; தாவிட- தாண்டிச் செல்லுமாறு; வானரம் தாவ வாளை தாவின- குரங்குகள் தாவுதலால் வாளை மீன்கள் தாவிக் குதித்தன. |
இளி-ஈளி என நீண்டது-எதுகை நிறைக்க. இளி-மந்த ஓசையுடையது. தாரம்-எடுத்தல் ஓசை. "மந்தரம் மத்திமம். தாரம் இவை மூன்றில்" (கல்லாடம். 21) எனுமிடத்து இவை இப்பொருளில் ஆளப்பட்டுள்ளமை காண்க. பூட்டுவிற் பொருள் கோள். |
(9) |
7026. | தூறு மா மரமும், மலையும் தொடர் |
| நீறு, நீர்மிசைச் சென்று நெருக்கலான், |
| ஏறு பேர் அகழ்நின்றும் எனைப் பல |
| ஆறு சென்றன, ஆர்கலிமீதுஅரோ. |