பக்கம் எண் :


542காஞ்சிப் புராணம்


     மூதேவி, திருமகள், சிந்தாமணி, காமதேனு, அரம்பையர்கள், தேவ
வைத்தியர், நான்கு தந்தங்களையுடைய மதம் பொருந்திய ஐராவதம் முதலாம்
பலவும் ஒலிக்கின்ற கடலிலுதித்த பின்பு வருந்துகின்ற இறப்பு என்னும் பெரிய
நோய்க்கு மருந்தாகிய அமிழ்தம் தோன்றிய அளவே விரும்பிய தேவர்களும்
அசுரர்களும் தம்முள் மாறுபட்டுக் கலகத்தை விளைத்தனர்.

திருமால் மோகினி வடிவாதல்

     ஆற்றல் மிகையாற் சுதைக்குடத்தை அடல்வாள் அவுணர்
கைப்பற்றத், தோற்று மறுகிப் புத்தேளிர் அலமந் தேங்குந்
துயர்நோக்கிக், காற்றும் பிரச நறுந்துளவக் கமஞ்சூற் கொண்டல்
இணைவிழிக்குக், கூற்றம் பதைக்கும் மோகினியாம் வடிவம் ஆங்குக்
கொண்டனனால்.                                         4

     வலியமைந்த வாளுடைய அவுணர் தம்முடைய வலிமை மிகுதி யால்
அமுதுடைக் குடத்தைக் கைக்கொள்ளத் தேவர் தோல்வியுற்று வருந்தி
மனஞ்சுழன்று இரங்குந் துன்பத்தைக் கண்டு தேனை ஒழுக்கும் நறிய
துளவம் அணிந்த நிறைந்த கருக்கொண்ட மேகத்தை ஒக்கும் திருமால்
இருவிழிகளைக் கண்டு கொலைத் தொழில் வல்ல கூற்றுவனும் நடுங்கும்
மோகினி என்னும் பெண் வடிவினை அந்நிலையே தாங்கினர்.

கலி விருத்தம்

இரண்டறப் பெண்மையும் எழிலும் வஞ்சமும்
திரண்டுருக் கொண்டெனத் திகழ்ந்து தோன்றிமால்
முரண்தகும் அவுணர்கைக் கொண்டமூரிநீர்
வரண்டுமா மணிக்கடல் அமிர்தம் வாங்கினான்.     5

     பெண்ணியல்பும், அழகும், வஞ்சனையும் ஒன்று படத் திரண்டு ஓர்
வடிவு கொண்டாற்போல விளங்கித் தோன்றித் திருமால், வலியமைந்த
அசுரர் கைப்பற்றிய வலியுடைய நீரில் கொழிக்கின்ற பெருமையுடைய
மணிகளையுடைய கடலிற் பெற்ற அமிழ்தை வாங்கினர்.

வாங்கிநின் றசுரருஞ் சுரரும் வல்லையே
ஆங்கநீர் நிரைநிரை யாக வைகுமின்
ஈங்குநல் லமிழ்தம்எல் லீர்க்கும் வேட்டவா
பாங்குறத் தனித்தனி பகுந்து நல்குகேன்.          6

     பெற்று ‘அசுரரே! சுரரே! நீவிர் எல்லீரும் விரைந்து வேறு வேறாக
வரிசை பெற இருந்திடுமின், இப்பொழுது நல்லமிழ்தத்தை இருசார்பினீராகிய
எல்லார்க்கும் விரும்பியவாறு தனித்தனியே பகிர்ந்து ஒழுங்குபட
வழங்குவேன்.’