பக்கம் எண் :


இராவண காவியம் 123

   
           27.    மக்க ளுந்தலை மக்களு மருவிநா னிலம்வாழ்
                 மக்க ளுந்தலை மக்களும் வகைபடு தொழில்செய்
                 மக்க ளுங்கருப் பொருளெனு மனையறத் தலைமை
                 மக்க ளாங்கிழ வனுங்கிழத் தியுமென வாழ்ந்தார்.

           28.    ஒத்த வோர்குல மாகியே யொருங்குற வாழ்ந்த
                 முத்த மிழ்ப்பெரு மக்களைக் கற்றறி மூடர்
                 பொத்தை யாய்ப்பெறும் பிறவிவேற் றுமையெனப் புகல்வர்
                 பித்தர் சொல்லினைப் போற்றுவோ ரவ்வகைப் பிறப்பே.
 
5. ஒழுக்கப் படலம்
 
கொச்சகம்
 
           1.     ஒப்பாரு மில்லாத வுலகேத்துந் தமிழ்மக்கள்
                 எப்பாலுந் தமக்குரிய வியனெறியாஞ் செயன்முறையிற்
                 றப்பாமற் செய்வனவுந் தவிர்வனவுங் கடைப்பிடித்து
                 முப்பாலின் படியொழுகி முறைமையொடு வாழ்ந்தனரால்.

           2.     அன்பாகி யருளாகி யறிவாகி யுலகுயிரின்
                 முன்பாகி யொளியாகி முதலாகி முடியாத
                 இன்பாகி யியல்கின்ற இறைவாழ்த்தி முறைவாழ்ந்தார்
                 தன்போலப் பிறவாழ்வு தனைப்பேணும் பழந்தமிழர்.

           3.    பொல்லாரைக் காணினுஞ் செம்பொன் முதலாம்பொருள் சிறிதும்
                 இல்லாரைக் காணினுமே யெத்தொழிலுந் தெரியாத
                 புல்லாரைக் காணினும் பால்பொருந் தியவாண் பெண்ணிலொரு
                 கல்லாரைக் காணாராய்க் கற்றுநல முற்றனரே.

           4.     மனத்தானும் பிறர்பொருளை வௌவாராய் வறியோருக்
                 கெனைத்தானுந் தினைத்தேனு மீத்துண்டு தமைச்சூழும்
                 இனத்தாரி னினத்தாரா யிடர்காணாப் படிவாழ்ந்தார்
                 தனைத்தானே நிகராகுந் தமிழ்த்தாயின் றலைமக்கள்.

           5.     சான்றோரி னுறுதிமொழி தலைக்கொண்டு சான்றோரை
                 ஈன்றோரின் படிபேணி யீன்றவிரு மக்களையும்
                 சான்றோரென் றுலகேத்தத் தாமாக்கிப் புகழ்பூண்டார்
                 வான்றோயு மலையாறு வளஞ்செய்யுந் தமிழ்நாடர்.
------------------------------------------------------------------------------------------
           27. கிழவன் கிழத்தி - காதற்றலைவர் 2. பிற - பிறவுயிர்