4. சிறைசெய் படலம் | கலி விருத்தம் | 1. மாதினொடு வேற்கரனை மாகொடியர் கொன்ற சேதியதை நம்மிறை தெரிந்ததை யுரைத்தாம் போதலரை யானிலை புகுந்துவடி வேலன் சீதைதனை மாதுசிறை செய்ததை யுரைப்பாம். 2. தேரின்மிசை யேறியவர் சென்றுசில நாளில் மாரியிடை யூறுபட மாமர முயர்ந்து காரினடை யாளமது கண்டுமலர் கொண்டு வேரினிடை யாரவமை விந்தக மடைந்தார். 3. அடைந்தவன் முடிந்தவள் அரண்மனை யடைந்து மடிந்தவ ளுடைமையை வகைமையொடு கண்டு முடிந்ததுமர் இன்பமு முடிந்ததென வுள்ளம் உடைந்துகர னோடவ ருடைமைகளுங் கண்டான். 4. அண்ணலின் வரவினை யறிந்துகுடி மக்கள் நண்ணியே வணங்கிமு னடந்ததை யுரைத்துப் பண்ணெனு மொழிச்சியொடு பார்வலனை மாய்த்து மண்ணினுயிர் கொண்டினமும் வாழுகிறோ மெந்தாய். 5. மன்னனை யிழந்ததுயர் மாற்றிய வரசி தன்னையு மிழந்துபெறு தந்தையொடு தாயை இன்னென விழந்தழு மிளங்குழவி யானோம் என்னவழ மன்னவ னிசைத்தமிழ மக்காள். 6. ஆரிய மெனும்புதரை யாவியற வெட்டிக் கூரெரி யதன்வயிறு கொள்ளவே கொடுத்து மாரியென வேதமிழ் மறவரை யமைத்துச் சீரொடு தமிழ்ப்பயிர் செழிப்புற வளர்ப்பேன். 7. என்றுபல கூறியவ ரேக்கமது போக்கி மன்றினிடை முன்காம வல்லியும் வளர்த்த கன்றுமட மானதனைக் கைகொடுபல் வீரர் ஒன்றிவர வேதேரி னொள்ளியனுஞ் சென்றான். ------------------------------------------------------------------------------------------- 1. ஐயால் - பஞ்சவடி. மாது - அசை. 3. உமர்முடிந்தது - உம்மவருடைய நாளும் முடிந்தது. ‘உமர்’ என்றது உம்மவர் என அவருடைமைகளை. அவர் - மறவர். | |
|
|