22. வில்லினன் சென்ற பின்னர் வேலினன் கோயில் புக்கான் அல்லலுற் றழுங்கு வோருக் காரிய முனிவ ரானார் புல்லிய மருந்து போட்டுப் புண்ணையும் பொருந்தச் செய்ய எல்லருங் களைப்பு நீங்கி யெழுந்தன ரொருவா றாக. 23. ஈங்கவர் களைப்பு நீங்கி யெழுந்தபின் வடவ ராமன் தாங்கிய துயரி னோடு தனித்தனித் தழுவி யெம்மீர் ஆங்கவன் றன்னை யின்றோ டழிக்குவே னென்ன வன்னார் நாங்களு மதுவே யென்றார் நடுமகன் நடக்கை காண்பாம். |
10. கும்பகன்னன் கொலைப் படலம் |
கலி விருத்தம் |
1. புண்ணோடமர் களமாகியே பொருவேனென விறைவன் அண்ணாவிதோ வந்தேனொடி யாமென்றிடு மளவும் நண்ணார்குல மில்லாமலே நான்செய்குவ னென்று திண்ணார்படை புடைசூழவே சென்றான்கும் பகன்னன். 2. வடிவேலொடு கதிர்வாளை வலங்கொண்டு சுழற்றப் படையோலிட வயமாவொடு பாய்மாவொலி முற்ற இடியேறென முரசங்கிணை யியமுள்ளன மற்ற துடியோடடி படவேயழல் சுடுசெங்களம் புக்கான். 3. கண்டேகொடித் தேர்கோடரிக் காம்பானவை யுடனே ஒண்டார்குல முயிர்தாங்கியே யோடோடின வதனைக் கண்டேமுதல் தின்றேதிரி கடையோனெதிர் வரவே உண்டோவலி யெனமுன்வர வோடோடின னவனும். 4. தடிகொண்டிடை மகனோங்கியே தாக்கத்தறு தலைகள் அடியுண்டன ருதையுண்டன ரளறுண்டனர் குருதிப் பொடியுண்டனர் புரளுண்டனர் பொய்யுண்டனர் போக இடியுண்டக லரவாமென விடருண்டகல் வாரே. 5. அவ்வேளையில் வடவாரிய னவனாரென வஞ்சன் ஒவ்வாமுறை யாலன்றெனை யோடென்றவ னிளையோன் எவ்வேளையு முனைநம்பியி ருக்கின்றவன் முதியோன் இவ்வேளையி லிவனுக்கிணை யில்லென்றதும் வில்லோன். ------------------------------------------------------------------------------------------- 2. வயமா - யானை. பாய்மா - குதிரை. இயம் - பறைப்பொது. 3. கிடையோன் - சுக்கிரீவன். 5. வடவாரியன் - இராமன். |