என்றும் இராமனின் அமைதி தவமும் முகமலர்ச்சியையும் புன்முறுவலையும் கம்பன் தொடர்ந்து கூறுவது சிந்திக்கத்தக்கது. இராமன் என்ற சொல் ‘மகிழ்விப்பவன்’ என்றும், ‘அழகன்’ என்றும் பொருள்படும்.57 இந்தப் பண்பை இராமனின் இன்றியமையாதப் பாத்திரப் பண்பாகக் கம்பன் படைத்துள்ளான். சினம் ஓர் எதிர்மை பண்பாதலின் அது இராமனிடம் பயிலாதவாறு படைப்பதில் கம்பன் கவனமாக இருந்திருக்கிறான் என உணர்கிறோம். மானுட நிலையில் தன்னம்பிக்கை உடையோர்க்குக் கோபம் வருதல் அரிது; தன் வலியும் மாற்றான் வலியும் தெரிந்து வினை செய்வார்க்கும் சினம் வருதல் அரிது. இராமனின் பாத்திரப் படைப்பு இந்த மானுடப் பண்பை உட்கொண்டதாக அமைந்துள்ளது. இனி அவதார நோக்கில் பார்க்குமிடத்தும், இறைத் தன்மையுடையவன் எதிரது அறியும் ஆற்றல் உடையவனாகையாலும், இறைமைக்குக் கோபம், காழ்ப்பு என்னும் எதிர்மைப் பண்புகள் பொருந்தாவாகையாலும், இப்பண்புகள் பற்றாத பாத்திரமாக இராமன் படைக்கப்பட்டுள்ளான். துளசிதாசரும் அவதார நோக்கில் இராமனைச் சினந் தவிர்த்த சீலனாகப் படைத்துள்ளார். அதனால்தான் போலும், பிற இராமாயணங்கள் எல்லாம் இராமன் விஷ்ணுதனுசைப் பரசுராமனிடமிருந்து வாங்கி வளைத்து நாணேற்றினான் என்று கூற, துளசிதாசர் மட்டும் அது தானாகவே பரசுராமனை விட்டு நீங்கி இராமனின் கையில் அடைக்கலமாயிற்று என்று கூறுகிறார். துளசிதாசரின் இராமாயணம் ஒரு மகா காவியம் அன்று; ஒரு மகா புராணம் என்று அறிஞர்கள் கருதுவதற்கும் இத்தகைய மாற்றங்கள் காரணமாயின என்று கூறலாம். நன்றியுரை இச்சிறிய கட்டுரையை எழுதுவதற்குப் பல்லாற்றானும் உதவி புரிந்து கீழ்க் குறிப்பிடப்பெறும் அருளுக்கும் அறிஞர் பெருமக்கட்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். ஸ்ரீராமன் திரு. ஜி. கே. சுந்தரம் திரு. E. வெங்கடேசலு திரு. R. வெங்கடேசலு பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி
57. A Sanskrit - English Dictionary, (Ed) Sir Monier Williams, London: OUP, 1976 P. 877 |