களும், நகர வருணனைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்பு முனை ஆகும். இந்த வளர்ச்சி காப்பிய முடிவு பெற்ற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் தனிப்பட்ட முறையில் ஏனோ இடம் பெற வில்லை. மதுரை, காவிரிப்பூம்பாட்டினம் என்ற இரண்டு நகரங்களில் வாழும் மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை முறையை விரிவாகப் பாடும் சிலம்பு பாண்டிய நாடு, சோழநாடு என்ற அடிப்படையில் பொதுவாகப் பேசவில்லை. இவ்விரு காப்பியங்களை அடுத்துத் தோன்றிய உதயணன் கதையில் (பெருங்கதை) தனியாக இவ் வருணனைகள் பாடப்பட்டிருந்தனவா, இல்லையா என்று அறிய வாய்ப்பில்லாமல், காப்பியத்தின் முற்பகுதி கிடைக்கவில்லை. இதனை அடுத்துத் தோன்றியவை பக்தி இயக்கக் காலப் பாடல்கள். அவற்றுள் இந்த வருணனைகளை எதிர்பார்த்தல் நியாயமில்லை. என்றாலும் மலை வருணனை, மருத நில மக்கள் வருணனை என்பவற்றை பற்றி ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றன திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள். சங்க இலக்கியங்களில் துளையமாடிய கம்பநாடன், நாட்டையும், மக்களையும் தனித்தனியே வருணிக்க வேண்டும் என்ற புதுமையை முதன் முதலில் புகுத்துகிறான். மன்னராட்சி நன்கு வளர்ந்து செம்மைப்பட்ட நிலையில் கம்பன் தோன்றியவன்; ஆதலின் கோசல நாட்டையும், அயோத்திமா நகரத்தையும் வருணிப்பதில் பெரும் கவனம் செலுத்துகிறான். பிற காப்பியங்களில் - தமிழாகட்டும், வடமொழியாகட்டும் பிற மொழியாகட்டும் - நாட்டை வருணிக்கும்போது சிறப்புடைய நாடு என்று சொல்வார்கள். அதில் ஒன்றும் ஐயப்பாடு இல்லை. ஆனால், அந்தச் சிறப்பான நாட்டை வருணிக்கும்போதுகூட ‘உடையார், இல்லார்’ பிரிவினை இருந்தே தீரும். அந்த உடையார் இல்லார் என்ற பிரிவினையை அறவே ஒழித்துப் புதியதொரு சமுதாயத்தை நிர்மாணித்த பெருமை கம்பனுக்கே உரியதாகும். அதனை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரு நாட்டைக் கம்பன் படைப்பதற்கு எது காரணமாக் இருந்திருக்கும் என்று சிந்திப்போமேயானால் ஒரு சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் சரியானவைதாம் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அப்படிப்பட்ட எண்ண ஓட்டம் வருவதை தடை செய்ய முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். |