கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. பல்லவர்கள் வீழ்ச்சி அடைந்து, சோழர்கள் அப்போதுதான் தலை தூக்கத் தொடங்கினர். இந்த இடைக்காலத்தில்தான் கம்பன் தோன்றியிருக்கிறான். இலக்கியத் திறனாய்வாளர்கள் பெருங்காப்பியம் தோன்றுவதற்குரிய காலகட்டத்தைக் குறிப்பிடும்போது இரண்டு நிலைகளில் பெருங்காப்பியங்கள் தோன்றக்கூடும் என்று சொல்கிறார்கள். முதலாவது ஒரு பெரிய சாம்ராஜ்யத்தினுடைய எழுச்சி அல்லது அந்த சாம்ராஜ்யத்தினுடைய வீழ்ச்சி. இந்த இரண்டு நேரங்களில்தான் பெருங்காப்பியங்கள் தோன்றக்கூடும் என்று சொல்கிறார்கள். அதற்கேற்றபடி உலக இலக்கியங்களில் உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பார்ப்போமேயானால் சோழ சாம்ராஜ்யம் தொடங்குகின்ற அந்தக் காலத்தில் தோன்றியவன் கம்பநாடன். சோழ சாம்ராஜ்யம் நானூறு ஆண்டுகள் வாழ்ந்து ஒருவாறு மடிகின்ற காலத்தில் தோன்றியவர் (12ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதி) சேக்கிழார் ஆவார். ஆக, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தில் கம்பனும், அதன் வீழ்ச்சியில் சேக்கிழாரும் இரண்டு பெருங்காப்பியங்களை ஆக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். இனி, சோழ சாம்ராஜ்யம் தொடங்குகின்ற காலம் என்றால் பல்லவ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக் காலம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தமிழ்நாட்டின் நிலை எதுவாக இருந்திருக்கும் என்று சிந்திப்போமேயானால் ஒருசில எண்ணங்கள் மனதில் ஊசலாடுகின்றன. சமதர்ம சமுதாயத்தைக் கம்பன் படைத்திருப்பதுபோல் முன்னும் இல்லை, பின்னும் இல்லை என்று கூறுகிறோம். அதே நேரத்தில் இப்படி ஒரு கற்பனை அவனுடைய மனதில் எப்படித் தோன்றிற்று என்று சிந்திப்போமேயானால் அன்றைய வரலாற்று நிகழ்ச்சிகள் இதற்கு இடம் தருகின்றன என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. கம்பனுடைய காலம் - அதாவது ஒன்பதாம் நூற்றாண்டில் சமுதாயம் ‘உடையவர்கள், இல்லாதவர்கள்’ என்ற பெரும் பிரிவைக் கொண்டிருந்தது என்பதில் ஐயப்பாடே இல்லை. சங்க காலம் தொடங்கிப் பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு முடியத் தமிழகத்தில் - உலகத்தில் வேறு எல்லாப் பகுதிகளிலும் |