இருப்பது போலத்தான் இவ்வேறுபாடு இருந்திருக்கிறது. உடையவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக்கிறார்கள். இல்லாதவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக்கிறார்கள். இல்லாதவர்களிலே புலவர்களாக, அறிஞர்களாக இருந்தவர்கள் இந்த உடையவர்களை அண்டி வாழ்ந்திருக்கிறார்கள். உடையவர்களும் ஏதோ அந்தப் பெருஞ்சொத்துக்கும் தாங்கள் உரிமைக்காரர்கள் என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது. இன்று மகாத்மா காந்தி சொல்வதுபோலப் பெரும் சொத்துடையவர்கள் அந்தச் சொத்துக்குத் தாங்கள் உரிமையாளர்கள் என்று நினைக்காமல், அதைப் பாதுகாத்துப் பங்கிட வேண்டிய கடப்பாடு உடையவர்கள் என்ற தர்மகர்த்தா முறையில்தான் பழந்தமிழ்ச் செல்வர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. கம்பனுடைய காலத்திலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். கம்பனுடைய வரலாறு நமக்குத் தெரியவில்லை. ஆனால், அதே நேரத்தில் அவன் தன் காலில் நிற்க முடியாதவனாய், அதாவது அவனுடைய குடும்பம் அவனைத் தனிப்பட்ட முறையில் வாழ வைக்க வாய்ப்பு இல்லாததாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சடையப்ப வள்ளல் என்ற பெரியதொரு பெருமகனை அண்டித் தன் வாழ்நாளைச் செலவிட்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. சடையப்பரைப் பொறுத்தமட்டில் முழுவதும் கம்பனை மகனாகவே ஏற்றுக்கொண்டு அற்புதமாக வளர்த்தான் என்பதில் ஐயப்பாடு இல்லை. அந்த நன்றிப் பெருக்கைக் கடைசிவரை கம்பன் மறக்கவும் இல்லை. அது என்னதான் இருந்தாலும் கம்பனுடைய அடிமனத்தில் ஒரோவழி இந்த எண்ணம் தோன்றித்தான் இருத்தல் வேண்டும். ‘தன்னுடைய காலில் நிற்கமுடியாமல் தன்னுடைய குடும்பத்தார் தன்னைத் தனிப்பட்ட முறையில், சுதந்திரமாக வாழவைக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால்தானே சடையப்பனைப் போன்ற வள்ளலை அண்டியிருக்க வேண்டியிருக்கிறது’ என்ற மன நெருடல் ஏற்பட்டிருக்க வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? உடையார், இல்லார் என்ற இரண்டு பெரும் பிரிவாகச் சமுதாயம் அமைந்திருந்ததுதான் காரணம். இந்த நினைவு ஆழமாகப் பதியப் பதியப் பெரும் கவிஞனாகிய அவன், இந்த உடையார் இல்லார் என்கிற வேறுபாட்டோடு கூடிய சமுதாயத்தில் வாழும்போதே, ‘இதெல்லாம் இல்லாத ஒரு சமுதாயம் இருந்தால் எப்படி இருக்கும்’ என்ற கற்பனையில் திளைத்திருக்க வேண்டும். அப்படி அவன் கனவு கண்டதனுடைய விளைவுதான் நாட்டுப் படலத்தில் அவன் அமைத்திருக்கின்ற |