சமுதாயம், இக்கருத்தோடு கம்பன் கோசல நாட்டை எப்படி வருணிக்கிறான் என்பதைப் பார்க்கும்போது வியப்பு ஒன்றும் தோறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் வால்மீகி கோசலத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியல் உற்றேன் (கம்பன்-32) எனக் கம்பன் தனக்கு மூல நூலாகக் கொண்டதாகக் குறிப்பிடும் வான்மீகத்தில் கோசலம் என்ற பெயர் சொல்வதைத் தவிர வேறு எந்தவிதமான வருணனையும் வால்மீகி முனிவர் செய்யவில்லை. அந்த ஒரு சொல்லை வைத்துக்கொண்டு ஒரு புதிய நாட்டைக் கற்பனை செய்கின்றான் கம்பன் என்றால், ஆழமான தூண்டுதல் ஒன்று ஏதேனும் இருந்திருக்க வேண்டும். அந்தத் தூண்டுதல்தான் அவன் சமைக்கக் கருதிய கற்பனைச் சமுதாய அமைப்பை, தமிழர்களுக்கு அறிவுறுத்தியது. அன்றைய நிலையில் வறுமையுடைய மக்கள் தங்கள் பிள்ளைகளைக்கூட விற்கத் தயாராய் இருந்தார்கள் என்பதைப் பெரிய புராணத்திலிருந்து அறிகிறோம். 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதியார்-பின்னர் சிறுத் தொண்டர் என்று புகழ்பெற்ற பெருமகனார்-தம்முடைய மகனை அரிவதற்கு முன்னர் மனைவியிடம் பேசுவதைச் சேக்கிழார் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். (சிறுத்தொண்டர் 56) ‘மைந்தர்தமை நினைவு நிரம்ப நிதிகொடுத்தால் தருவாருளரே’ என்று சொல்கிறார். ஆகவே, நிரம்பப் பொருள் கொடுத்தால் தங்கள் பிள்ளைகளை விற்கத் தயாராய் இருந்தார்கள் என்று அறிகிறோம். இதற்கு முன்னர், வடநாட்டில் வழங்கும் சுனச்சேபன் கதை இதை நன்கு வலியுறுத்துகிறது. நரபலி இடுவதற்காக ஒரு பிள்ளை வேண்டும் என்று அரசன் பெரும்பணத்தைக் கொடுத்துப் பிள்ளை வாங்கப் புறப்படுகிறான். மூன்று பிள்ளைகளையுடைய அம்பரீஷன் இரிசிகன் தன் முதல் பிள்ளையையும், அவன் துணைவி தன் கடைசிப் பிள்ளையையும் தாங்கள் வைத்துக்கொண்டு இடையில் நின்ற சுநச்சேபனை பொருளுக்கு விற்றுவிட்டார்கள் என்று அறிகிறோம். (கம்பன் 599. 601) ஆகவே, உடையார், இல்லார் |