ஒரு சூழ்நிலை ஏற்படும்போது இவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதை வைத்துத்தான் இவனுடைய பிற்கால வாழ்க்கை அமையும் என்பதை எடுத்துச் சொல்பவன்போலக் கம்பநாடன் இந்த அற்புதமான காட்சியை நமக்குக் காட்டுகிறான். ஆகவே, இராகவன் இக்கட்டான சூழ்நிலையில் எப்படிச் சிந்தித்துச் செயல்படுகிறான் என்பதைக் காட்டுவதற்குத் தாடகைவதை நமக்கு ஒரு பாடமாக அமைகின்றது. அவனுடைய வளர்ச்சி முறையில் ஒப்பற்ற திருப்பு மையமாக அமைந்துவிடுகிறது தாடகை வதம் என்பதை அறிகின்றோம். இதை ஒரு தொகுப்பாக வைத்துச் சிந்தித்தோம். மேலும் ஒரு சிந்தனையோயோட்டம் இதில் கிடைக்கின்றது. வளர்ந்து, காளைப்பருவம் அடைந்த ஒருவன் தனக்கென்று சில எண்ணங்கள், நினைவுகள், குறிக்கோள்கள் முதலியவற்றை உடையவனாக இருப்பான். முதன்முதலாக இப்போது அந்நிய மனிதனோடு பழகுகிறான் இராகவன். விசுவாமித்திரன் முன்பின் பழக்கம் இல்லாதவன். அப்படிப்பட்ட ஒருவன் ஒன்றைச் சொன்னான் என்றால் சாதாரண மனிதர்கள்கூட அதை ஏற்றுக் கொள்வது கடினம். அப்படியிருக்க அரச குமாரன் எப்படி ஏற்றுக்கொண்டான் என்று சிந்திக்கத் தோன்றுகிறது அல்லவா? அதிலும் ஓர் அடிப்படை இருக்கின்றது. கீதையில் சொன்னபடி சமதிருஷ்டி உடையவனாக, ஸ்திதப்பிரக்ஞனாக ஒருவன் வாழ்வானேயானால் அவன் தான், தனது, தன்னுடைய எண்ணம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எது கடமை என்று சொல்லப்படுகிறதோ அதை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பான். அந்தக் கடமையை நிறைவேற்றும்போது தன்னுடைய விருப்பு வெறுப்புகள் குறுக்கிட அவன் இடம் கொடுப்பதே இல்லை. இராமன் தனது கருத்து எதுவாயினும் உலகங்களை யெல்லாம் சிருஷ்டித்தவனும், காயத்ரீ மந்திரத்தைத் தோற்றுவித்தவனும், யாவராலும் போற்றப்படுகின்றவனும், பிரும்மரிஷி என்ற பட்டம் பெற்றவனுமாகிய விசுவாமித்திரன் ‘இதுதான் அறம்’ என்று சொல்வானேயானால், இதுவரையில் அறம் என்பதற்குத் தான் கொண்டிருந்த கருத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு விசுவாமித்திரன் ‘இவளைக் கொல்வதுதான் அறம்’ என்று சொல்லும்போது அதனை ஏற்றுக் கொள்கிறான் என்று காணுகின்றோம். அப்படி ஏற்றுக்கொள்ளும்போது இராமனுடைய வளர்ச்சியையும் நாம் அறிய முடிகிறது. உண்மையில் சமதிருஷ்டி உடையவனாக அவன் வளருகிறான் என்பதைக் காண முடிகிறது. இப்படிச் சமதிருஷ்டி உடையவனாக வளருகின்ற இந்த வளர்ச்சி பிற்காலத்தில் அவனுக்கு உதவப்போகிறது என்பதையும் காணுகிறோம். |