இனி அடுத்தபடியாக மூன்றாவது பகுதிக்குச் செல்லுகிறோம். கடிமணம் நடைபெறுகிறது. மணத்தம்பதிகள் தசரதனோடு சேர்ந்து அயோத்தி திரும்புகிறார்கள். இராமன், தசரதன் ஆகிய இருவரும் ஒரு தேரில் இருக்கிறார்கள். அந்த நிலையிலே ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சற்றும் எதிர்பாராத வகையில், உலகம் எல்லாம் கண்டு அஞ்சத்தகுந்த முறையில், பூமி நடுங்குகின்ற அளவில், சமுத்திரங்களெல்லாம் நிலைகுலைகின்ற முறையில், திக் கஜங்கள் எல்லாம் கலங்குகின்ற வகையில் பரசுராமன் வருகின்றான். பரசுராமனைப் பற்றி இராகவனுக்கு ஒன்றும் தெரியாது என்பது நன்றாகத் தெரிகின்றது. பரசுராமன் என்றால் யார், எத்துணை ஆணவமும், அகங்காரமும், தவபலமும் உடையவன், அரசர்களை 21 தலைமுறை கருவறுத்தவன் என்பதெல்லாம் தசரதனுக்குத் தெரியுமேயொழிய இராகவனுக்குத் தெரியக் காரணமே இல்லை. வந்த பரசுராமனும் மிகத் தடபுடலாகத் தன்னுடைய ஒவ்வொரு சொல்லிலும் தன்னுடைய ஆணவமும் அகங்காரமும், தவபலமும் வெளிப்படுகின்ற முறையில் பேசுகிறான். அவனைக் கண்ட மாத்திரத்தில் தசரதன் நடுங்கி, அஞ்சி, அடைக்கலம் என்று எவ்வளவோ சொல்லியும் அதைப் பரசுராமன் காதில் வாங்கிக்கொள்ளாது, இராமனைப் பார்த்துப் பேசுகிறான். நீ ஓட்டை வில்லை ஒடித்த ஓசை கேட்டு இங்கே வந்தேன். இங்கே நான் உண்மையான வில்லை வைத்திருக்கிறேன். ‘வல்லையாயின் வாங்குதி தனுவை’ (1293) என்று சொல்லுகிறான். இந்தக் காட்சி நடைபெறுவதற்கு முன்னர்த் தசரதனுக்கும், பரசுராமனுக்கும் நடைபெறும் உரையாடல்களைப் பார்ப்போமேயானால் வியப்பில் ஆழ்ந்து விடுகிறோம். இந்த நிலையிலும்கூட இராமன் ஒரு சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் “யாரோ இவன்?” என்கிற ஒரு வினாவோடு நிறுத்திவிடுகின்றான். இப்பொழுது பரசுராமன் நேரடியாக இவனைப் பார்த்து ‘வல்லையாயின் வாங்குதி தனுவை’ என்று சொல்லும்போது இமயமலைபோல் உயர்ந்து நிற்கின்றான் பரசுராமன். ஆணவம், அகங்காரம், தவபலம், சினம் ஆகியவற்றில் ஈடு இணை இல்லாதவனாக வளர்ந்து நிற்கின்றான். அவன் எதிரே ஒரு சிறிதும் மனக்கலக்கமோ, அச்சமோ அல்லது விதிர்விதிர்ப்போ இல்லாமல் இராமன் பேசுகின்ற பேச்சுக்கள் |