செந்தமிழருட்செம்மலின் முதலாண்டு நினைவையொட்டி முதற் காண்ட உரை வெளிவர வேண்டும் எனவும், தொடர்ந்து 1993க்குள் கம்பராமாயண உரைப்பணியை நிறைவுசெய்ய வேண்டும் எனவும் முடிவுகள் செய்யப்பெற்றன. கம்பன் அறநிலையம் ஏற்றது கம்பராமாயண உரை வெளியிடுதல், அதன்பின் அது தொடர்பான ஆய்வுகள் வெளியிடுதல் போன்ற பணிகளைக் கோவை, கம்பன் டிரஸ்டிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பெற்றது. திருமிகு ஜி.கே.எஸ். அவர்களின் அன்பாதரவால் கம்பன் அறநிலையின் ஒரு பணியாக இத் திருப்பணி ஏற்கப்பெற்றது. கம்பராமாயண உரைக்குழு, கம்பராமாயண உரை நிதிக் குழு, உரையாசிரியர் குழு என மூன்று குழுக்கல் 2-10-92-இல் நடைபெற்ற கம்பன் அறநிலையக் கூட்டத்தில் அமைக்கப்பெற்றன. இந்தத் திட்டத்தினை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டதோடு, இதனால் வரக்கூடிய பொறுப்புக்களின் சுமை அறிந்து மிகவும் கவனமாக ஜி. கே. எஸ். அவர்கள் செயல்களை நடத்திவருகிறார். தமிழர்களின் நல்வினைப் பயனாய் இன்று கம்பராமாயண விளக்கவுரையைக் கம்பன் அறநிலையம் வெளியிடுகின்றது. களப் பணி கம்பன் அறநிலை, கம்பராமாயண உரை (நிர்வாக)க் குழு, கம்பராமாயண நிதிக்குழு - இவற்றின் உறுப்பினர்கள் தஞ்சைப் பெரிய கோவிலை உருவாக்கிய மாமன்னன் இராசராசன் போன்றவர்கள். ஏவுதற் கருத்தாவின் கருத்துவழி நின்று இயற்றுதற் கருத்தாக்களாக எத்துணையோ தச்சர்களும் கொத்தனார்களும் பெருங்கோவிலை எழுப்பினர். அவர்களைப் போல உரையாசிரியர் குழுவினர் கம்பராமாயண விளக்க உரையைக் கண்ணும் கருத்துமாக இருந்து உருவாக்கினர். இந்தக் குழுவினரை நெறிப்படுத்திடச் செந்தமிழ் வித்தகர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் வாய்த்தார். கம்பர் பணிக்கு இவ்வாய்ப்பு ஒரு பெறலரும் பேறு. உரையாசிரியர்களை நெறிப்படுத்தியதோடு, முதன்மைப் பதிப்பாசிரியராகவும் அமைந்து இவ்விளக்க உரைப் பதிப்பைச் செம்மைப்படுத்தியுள்ள அவருக்குப் பொதுவாகத் தமிழர்களும் குறிப்பாகக் கம்பர் ஆர்வலர்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களாவர். |