15

பிரிக்கப்பெற்றுள்ளன.  இவ்வகையில்  மர்ரே  கம்பெனியார்  வகுத்துக்
கொண்ட விதிமுறைகள் இப் பதிப்பிலே பின்பற்றப்பெற்றுள்ளன.

ஆயினும்,     யாப்பிலக்கண நெறியையும்பேணி, பாடல்கள் யாப்பு
வகையில்  இன்னின்ன  பா  அல்லது  பாவினத்துக்கு  உரியன என்ற
செய்தியும் இப்பதிப்பில் தரப்பெறுகிறது.

இப்பதிப்பின் அமைப்பு 

காண்டத்தைத்  திறனாய்வு முறையில் அறிமுகப்படுத்தும் முன்னுரை
முதலில்  காணலாம்.  இதனை  வரைந்தவர் பேரா. அ.ச.ஞா. அடுத்து,
வான்மீகம்,   இராம  சரித  மானசம்  போன்றவற்றோடு  ஒப்பிட்டும்
உறழ்ந்தும்   காட்டுகின்ற   ஒப்பிலக்கியக்  கட்டுரையைக்  காணலாம்.
இதனை எழுதியுதவியவர் பேரா. டாக்டர் அ.அ. மணவாளன்.

படலந்தோறும்   சுருக்கமான   முன்னுரை  உண்டு. சொற்பொருள்
நோக்கிய  வகையில்  சீர்   பிரித்த  செய்யுள், பதவுரை, விளக்கவுரை,
இன்றியமையாத  இலக்கணக்  குறிப்பு,  ஒப்புமைப்  பகுதி ஆகியவை
கொண்டது   இவ்   விளக்கவுரைப்   பதிப்பு.   இறுதியில்  செய்யுள்
முதற்குறிப்பு  அகராதியும் அருஞ்சொல்லகராதியும் காணலாம். இடைச்
செருகலாகவோ     பிற     வகையாலோ     நூலுள்    இடம்பெற
இயலாதவையாயினும்,    ஏடுகளில்   இடம்   பெற்றுவிட்ட   மிகைப்
பாடல்களையும்  புறக்கணிக்க  விரும்பவில்லை.   ஆராய்ச்சியாளர்க்கு
அம்   மிகைப்பாடல்களும்  ஏதேனும்  பயன்  தரக்கூடும்.  ஆதலால்,
மிகைப் பாடல்களும் காண்டத்திறுதியில்  தரப்பெற்றுள்ளன. பல்கலைச்
செல்வர்  தெ.பொ.மீ.,  பதிப்பு  நாயகம் பேரா. மு. சண்முகம் பிள்ளை,
பேரா.    அ.ச.ஞா.   ஆகியோர்   ஏற்கனவே   வரையறுத்துள்ளபடி
வெளிவந்த  சென்னைக் கம்பன் கழகப் பதிப்பு இவ்வகையில்  ஓரளவு
உதவியது.  சென்னைக் கம்பன் பதிப்பிலுள்ள பாடங்களை  அப்படியே
ஏற்காமல்,  உரையாசிரியர்களின் ஆய்வுணர்வுக்குப் பொருத்தம் என்று
பட்ட பாடங்களே இப்பதிப்பில் இடம் பெறுகின்றன.

மொத்தத்தில்  இப்பதிப்பு  ஏனைய  பதிப்புகளினின்றும் வேறுபட்ட
முத்திரை பதித்த தனிப்பதிப்பு என்றால், மிகையாகாது.

நன்றி

இத்  திருப்பணியில்  நாட்டத்தை  ஏற்படுத்தி  வழி  நடத்திவரும்
அலகிலா  விளையாட்டுடைய  தலைவர்க்கு  முதலில்  நன்றி செலுத்த
வேண்டும். ‘அலகிலா விளையாட்டுடையார்’ என்பதை இம்