சேவாரத்ன டாக்டர் ஆர். வேங்கடேசலு நாயுடு அவர்களின் மாளிகையில் செவ்வாய்தோறும் காலையில் நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களையும் மாலையில் கம்ப ராமாயணத்தையும் அனுபவிக்க ஒரு குழு கூடிவருகிறது. இந்த மங்கள வாரக் குழு சில நாள்கள் தொடர்ந்து குன்னூரில் கூடி அளவளாவியது. காலையிலும் மாலையிலும் குறிஞ்சிக் குன்னூரில் உலாப் போவது இக் குழுவின் வழக்கம். ஒரு நாள் காலையில் உலாவின்போது 'கம்ப ராமாயண உரை வெளியிடுவார் இல்லையே' என்று ஒருவர் இரங்கினார். அவர் வாய் மூடுமுன்னரே நல்லாசிரியர் இ. வேங்கடேசலு அவர்கள் ''இந்தக் கணமே நான் என் பெற்றோர்கள் எல்லப்பா - ரெங்கம்மாள் நினைவாக ஒரு லட்ச ரூபாய் தருகிறேன். மேலும், வேண்டியன எல்லாம் செய்வோம்'' என்று உறுதியாகக் கூறினார். இப்படிக் குன்னூர் மலையிலே பிறந்தது இந்தத் திருப்பணி. அந்தக் குழுவின் தீவிர உறுப்பினராகிய செய்தமிழ் அருட் செம்மல் டாக்டர் பி.எஸ்.ஜி.ஜி. கோவிந்தசாமி நாயுடு அவர்கள் இந்தத் திட்டத்துக்குப் பேரூக்கம் தந்தார். உடனே செயல்படத் தூண்டினார். கம்ப ராமாயண விளக்கவுரை முயற்சி இவ்வாறு கருக் கொண்டது. கரு வளர்ந்தது குன்னூர்க் குழு கோவை வந்ததுமே செயல்படலாயிற்று. பேராசிரியர் அர.சு. நாராயணசாமி அவர்கள் நினைவு நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் இப்பணிக்குப் பயன்பட வழி வகுத்தார் நல்லாசிரியர் வேங்கடேசலு. செந்தமிழ் அருட்செம்மல் கம்ப ராமாயண உரைக் குழுவை அமைப்பதற்கு உரிய பணிகளைத் தொடங்கினார். பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், கம்பன் அறநெறிச் செம்மல் ஜி.கே. சுந்தரம் உள்ளிட்ட கம்பன் ஆர்வலர் பலரையும் ஒரு கூட்டத்துக்கு அழைத்தார். 16.5.1992 இல் அந்தக் கூட்டம் கூடிற்று. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருபது பேர்க்குமேல் வந்து கூடினர். ஆனால், அந்தோ, அன்று அதிகாலையில் செந்தமிழருட்செம்மல் இறைவன் திருவடி அடைந்துவிட்டார். |