கவிதைத் திருவுள்ளம் எழுந்தருளியுள்ள இம் மாபெரும் ஆலயத்தை உருவாக்கும் கம்பன் அறநெறிச் செம்மல் திருமிகு. ஜி.கே.சுந்தரம் அவர்களின் தளரா ஊக்கம் மறக்கக் கூடியதன்று; ஒவ்வொரு கட்டத்திலும் எழக்கூடிய சிக்கல்களை முன்னிறுத்திக் காட்டி, அவற்றை நீக்க வழியும் வகுப்பவர் அவரே. அடுத்து, இம்முயற்சிக்குப் பிள்ளையார் சுழி இட்ட நல்லாசிரியர் இ. வேங்கடேசலுவுக்கு வணக்கம் செறிந்த நன்றி உரியது. பரம பாகவதராகிய திரு.ஆர். துரைசாமி நாயுடு, சேவாரத்ன டாக்டர் ஆர். வேங்கடேசலு நாயுடு, இளமைப் பொலிவுக்கு ஆக்கமான முயற்சி கொண்ட திரு. கிருஷ்ணராஜ் வாணவராயர் - இவர்கள் இயக்கவே இயங்குவது இத்திட்டம். செந்தமிழருட்செம்மல் மறைந்தாலும், அவர் வழியை மறவாத திருமதி பிரேமா கோவிந்தசாமி, மற்றும் உடுமலைப்பேட்டை ஸ்ரீ வேங்கடேசா காகித ஆலை நிர்வாகத் தலைவர் திரு. கெங்குசாமி நாயுடு போன்றவர்கள் மனமுவந்து இந்தத் திருப்பணியில் பங்கு கொள்கின்றனர். ''உளதாகும் சாக்காடு'' என்று வள்ளுவர் சொன்னவாறு புறத்தே மறைந்தும் அகத்தே மறையாது நிலவும் பேரா. அர.சு. நாராயணசாமி நினைவு நிதியும் இப்பணிக்கு உதவியது. நிதி மிகுந்தவர் அந்நிதி நற்பணிக்கே உரியதென்று தெளிவுற்று உதவுதலாலன்றோ இவ்வுலகம் தழைக்கின்றது! பேரா.அ.ச.ஞா.வுக்குக் உதவியாக நின்று பணிபுரியும் திரு. நா. சந்திரசேகரன் இப்பணி இயந்திரத்தின் ஒரு பல் - சக்கரம். உரையாசிரியர்கள் இலரெனில் இந்தக் காப்பிய மாளிகை மதுரை மீனாட்சி கோவில் போல் - அரங்கன் கோவில்போல் காட்சியளித்திருக்குமா! ஊர் கூடி இழுந்த தேர் - தமிழ் நெஞ்சங்களின் நினைவு வீதிகளில் உலா வருகிறது. தெய்வ மாக் கவி தரிசனம் பெற்று, அலகிலா விளையாட்டுடைய ஆதிமூர்த்தியின் அருளைப் பெற்றிடத் தமிழறிந்தோர் யாவரையும் 'சேர வாரும்' எனக் கரம் கூப்பி வரவேற்கிறோம். ம்.ரா.போ. குருசாமி ஒருங்கிணைப்பாளர், இணைப்பதிப்பாசிரியர். |