கொண்டு வாழ்ந்தான் அனுமன். இராமனை நண்பனாகக் கொள்வதற்கும் அவன் உதவியைக் கொண்டு வாலியைக் கொல்வதற்கும் கிட்கிந்தை அரசை மீட்டுத் தருவதற்கும் சுக்கிரீவனுக்கு உதவி செய்த ஒரேயொருவன் அனுமனே ஆவான். அத்தகைய அனுமன் அருமை பெருமைகளை, ஆற்றலை, நுண்மாண் நுழைபுலத்தை ஒரு சிறிதும் அறிந்தவனாகச் சுக்கிரீவன் காணப்படவில்லை. தன்பால் நேயம் கொண்டு பணிபுரிந்த அனுமனை முழுவதும் அறிந்துகொள்ளாதவன் சுக்கிரீவன். ஆனால், சுக்கிரீவனுக்கும் அனுமனுக்கும் பகையாகிய வாலியோ அனுமனையும் அவனது ஆற்றலையும் அறிந்திருந்தான். அனுமனை இராமன் அறிந்ததுபோல இராமகாதையில் அனுமனை அறிந்த வேறொருவர் உண்டென்றால் அது வாலியே ஆவான். அதனால்தான், தன் இறுதிக்காலத்தில் தன்னைக் கொன்றவனாகிய இராமனை நோக்கி, ''உனக்குத் துணை புரிய வந்துள்ள அனுமனைச் சாதாரணமானவன் என்று நினைத்து விடாதே. நின்செய்ய செங்கைத் தனு என நினைதி' (4071) என்று அறிமுகம் செய்துவைக்கிறான். இராமனின் கோதண்டம் அனைவரும் அறிந்த பேராற்றல் உடையது என்றாலும், இராமன் கையிலிருக்கும்போதுதான் அது அவன் விருப்பப்படி பணிபுரிய முடியும். அனுமன் என்றால் இராமனைவிட்டுப் பிராட்டியைத் தேடிக் கொண்டு நீண்டதூரம் சென்றுகூடப் பெரும்பணி புரியும் பேராற்றல் உடையவன்; எனவே, நின்று பணிபுரியும் செங்கைத் தனுவை விட நின்றும் சென்றும் பணிபுரியும் அனுமன் ஒருபடி உயர்ந்தவன் என்று சொல்லாமல் சொல்லிக்கொள்கிறான் வாலி. கிட்கிந்தா காண்டத்தில் கலன்காண் படலம் தவிர எல்லாப் படலங்களிலும் அனுமனைச் சந்திக்கின்றோம். அனுமன் அரும்பாடுபட்டு வாங்கித் தந்த அரசையும் சுக்கிரீவன் 'பூவியல் நறவம் மாந்திப் புந்தி வேறு உற்று' இழக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. 'கார்காலம் முடிந்தவுடன் படையுடன் வருகிறேன்' என்ற வார்த்தைகளை மறந்து மதுமயக்கத்தில் கிடக்கின்றான் சுக்கிரீவன். இராமன் ஏவலால் புயல் போலச் சீறி வரும் இலக்குவனைச் சந்திக்க யாருக்கும் நெஞ்சுரமோ சூழ்ச்சியோ இல்லை. கைம்பெண் கோலத்தில் தனியே வாழ்ந்துவரும் தாரையை அனுப்பி இலக்குவன் கோபத்தைத் தணித்து இரண்டாம் முறையாகச் சுக்கிரீவன் உயிர் பிழைக்குமாறு செய்தவன் அனுமனே ஆவான். இராவண வதந்தான் காப்பிய நோக்கம் என்றால் அது நிறைவேற ஒரு மாபெரும் சிக்கல் இடையே உள்ளது. இராவணிடம் நெருங்கிய தொடர்புடைய வாலியைக் கொன்றால் ஒழிய காப்பிய நோக்கம் நிறைவேறாது. இந்த மாபெரும் தடையை |