உரையும் - பதிப்பும் ஒருவரே உரையாசிரியர்ஆயின் உரையமைப்பிலே ஒருமைப்பாடு இருக்குமெனப் பொதுவாக எதிர்பார்க்கலாம். பல அறிஞர்கள் உரை எழுதுமாறு நேரிட்டமையால் உரையமைப்பில் ஒருமைப்பாடு நிலவுதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கென உரையாசிரியர்கள் பல தடவை கூடினர்; முன் மாதிரியாக எழுதிய உரைகளை விரிவாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்து விவாதித்தனர். திறனாய்வுச் செம்மலும் கம்ப ராமாயண வித்தகரும் ஆகிய பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் தலைமைப் பதிப்பாசிரியப் பொறுப்பினை ஏற்று, உரையாசிரியர்களை நெறிப்படுத்தினார். தமிழரங்கில் - குறிப்பாகக் கம்ப ராமாயணப் புலமையில் முன்னிற்கும் புலமைச் செல்வர்கள் உரை எழுத ஏற்றனர் என்பது இப் பணியின் சிறப்பாகும். வரி வரியாகப்படிக்கக் கேட்டு உரிய மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்தபின்னரே அ. ச. ஞா. இவ்வுரையினை அச்சகத்துக்கு அனுப்பிவருகிறார். இத் தொண்டில் அ.ச. ஞா.வுக்கு உதவியாக இருப்பவர்களில் டாக்டர் ம.ரா.போ. குருசாமி, மூதறிஞர் வே. சிவசுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப் பதிப்பின் அமைப்பு கோவை, கம்பன்அறநிலை வெளியிடும் இந்தப் பதிப்புக்கு முன்னும் பல உரைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன. முன்னோர் செய்த பணிகளை நன்றியுணர்வோடு போற்றும் உரையாசிரியர்கள் தங்கள் தனித்தன்மை கெடாமல் உரை வகுத்துள்ளனர். மேலோர்களின் காட்சிகளையும் கண்டு, காலமும் சூழலும் தரும் புதுக் காட்சி விளக்கங்களையும் கண்டு காட்டும் வாய்ப்பு இப்பதிப்பின் உரையாசிரியர்களுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, தனித்தன்மைகள் சில இப் பதிப்புக்கு உண்டென்பது தெளிவு. யாப்பிலக்கண விதிப்படிஇப்பதிப்பில் சீர்கள் பிரிக்கப்பெறவி்ல்லை. ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையவர்களும் எளிதில் மூலத்தைப் படித்துணருமாறு சொற்பொருள் தெளிவுக்கு ஏற்பச் சீர்கள் பிரிக்கப் பெற்றுள்ளன. இவ்வகையில் மர்ரே கம்பெனியார் |