கம்பனுடைய இராமகாதைப் பாடல்கள் மிகைப் பாடல்களை நீக்கிப் பார்த்தால் மொத்தம் உள்ளது, சென்னைக் கம்பன் கழகம் பதிப்பின்படி 10368 ஆகும். இதில் முதல் ஐந்து காண்டங்களின் பாடல் தொகை 6058 ஆகும். யுத்த காண்டம்மட்டும் 4310 ஆகும். என்றாலும், ஆரண்ய காண்டத்தில் வரும் கரன்வதை 192 பாடல்களும், சுந்தர காண்டத்தில் வரும் கிங்கரர்வதை முதல் பாசப் படலம் முடிய உள்ள பாடல்கள் 316 ஆகும். இவற்றையும் யுத்த காண்ட எண்ணிக்கையோடு சேர்த்தால், போர்பற்றிக் கூறும் பாடல்கள் மொத்தம் 4310+192+316=4818 பாடல்கள் ஆகும். |
இராமனுடைய சிறப்பையும், பிராட்டியின் சிறப்பையும் கூறவந்த கம்பநாடன், காப்பியத்தில் உள்ள 10368 பாடல்களில், போருக்கென்று 4818 பாடல்கள் பாடுவது தேவையா? பொருத்தமா? என்று சிந்திப்பது பொருத்தமுடையதாகும். சுந்தர காண்டத்தில் உள்ள போர்பற்றிக் கூறும் 316 பாடல்களில் போரிடுபவன் அனுமனே ஆவான். இவ்வளவு விரிவாகப் போர்பற்றிப் பாடக் காரணம் என்ன என்ற வினாவை எழுப்பி விடை காண்பது பயனுடையதாகும். இந்த நிலையில் கம்பன் தோன்றிய காலம், அன்றைய தமிழகத்தின் நிலை,அரசியல் சூழ்நிலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும். பல்லவப் பேரரசு வீழ்ச்சி அடைந்த நிலையில், தமிழர்களாகிய சோழர்கள் நிலைபேறுடைய ஓர் அரசை நிறுவ முனைந்த காலம் அது. விஜயாலயன், முதல் பராந்தகன் என்பவர்களுடைய காலம்தான் சோழப் பேரரசின் அங்குரம் (முளை) தலையெடுத்த காலமாகும்.தமிழர் அல்லாத பல்லவர்கள் வீழ்ச்சி அடைந்து, தமிழர்களாகிய சோழர்கள் தலையெடுத்த காலம், தமிழகத்தின் தென்கோடியில் இருந்த |