30   யுத்த காண்டம்

அவ்வாறில்லாமல் இரண்டு  கடமைகளும் தம்முள் முரண்பட்டு
இரு  வேறு வழிகளில் செல்வதாக வைத்துக்கொண்டால் அதனைத்
தர்மசங்கடமான நிலை என்றுதான் கூறவேண்டும். ஏதோ  ஒன்றைத்
தேர்ந்தெடுத்து     அதன்வழிச்  சென்றால், மற்றொரு கடமையைத்
துறந்து   விட்டதாகப் பழி பேசப்படும். இந்தத்    தர்மசங்கடமான
சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்டவன் வீடணன்.
 

புலத்திய     முனிவரின்    பேரர்களுள் இராவணன் மூத்தவன்,
கும்பகர்ணன்    இளையவன்.   அவனுக்கும் இளையவன் வீடணன்.
இராவணன்    தவறிழைக்கிறான்,  பிறன்மனை    நயத்தல் பாவமும்
பழியுமே    தரும்    என்பதைத்  தம்பியர் இருவரும் அறிகின்றனர்.
வீடணனைப்  பொறுத்தமட்டில்  அவன்  வாழ்க்கை முழுவதும் தவ
வாழ்க்கையாகவே    அமைந்து    விட்டது என்பதை இராம காதை
சுட்டிச் செல்கிறது. சிற்றுருக் கொண்டு அனுமன் இலங்கையில் உள்ள
ஒவ்வொரு மாளிகையாகத்   தேடிக்கொண்டு வருகிறான்.   ஏறத்தாழ
எல்லா     மாளிகைகளும்    ஒரே   மாதிரியாக இருக்க, ஒரே ஒரு
மாளிகைமட்டும்    அந்தச் சூழ்நிலைக்கு முற்றிலும்   மாறுபட்டதாக
இருக்கக் காண்கிறான். அதைக் கூறவந்த கம்பன்,
 

..........................................கருநிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது' என, அவர் உருமேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.

(4970)
 

என்று பாடுவதால்,    வீடணனைப்  பொறுத்தவரை, இலங்கையில்
வாழ்ந்தாலும், இராவணன் தம்பியாக இருந்தாலும் அவன்   வாழ்க்கை
முற்றிலும்    மாறுபட்டதாகவே    இருந்தது என்பதைக்  குறிக்கிறான்.
வெண்ணிறமுடைய தருமம் தன் உண்மையான வடிவுடன் இலங்கையில்
வாழமுடியாது என்பதால் கருநிறம் பூண்டு வாழ்ந்தது என்று பேசுவதன்
மூலம் வீடணனுடைய உண்மைச் சொரூபத்தைக்   கவிஞன ் நமக்குக்
காட்டுகிறான்.
 

அறவழியில் நிற்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக்  கொண்ட
வீடணன், வாழும் வீடுகூட   அரக்கர்    வாழ்க்கையோடு  ஒன்றாமல்
தனித்து இலங்கிற்று என்பதை, அது யாருடைய வீடு என்பதை அறியாத
நிலையிலும் வீடணைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையிலும் நுண்மாண்