தசரதன் பழிக்கு ஆளாவான். வாய் திறந்து பேசியதனால் பழியை அவள் ஏற்றுக்கொள்கிறாள். ஆகவே, தன்னுடைய அருள் நிரம்பிய உள்ளத்தால், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, கணவனைக் காப்பாற்றுவதுதான் தன்னுடைய கடமை, தற்கொண்டானைப் பேணுவதுதான் தன்னுடைய கடமை, கற்புடைய மனைவியின் கடமை என்ற முடிவுக்கு வந்து ஒப்பற்ற தியாகத்தைச் செய்பவளாக, ஓர் உறுதிப்பாட்டோடு செயல்பட்டவளாகத்தான் - இந்தப் பாத்திரத்தை அமைத்திருக்கிறான் கம்பன் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. கன்யா சுல்கக் கதை வெளிப்படையாகக் கம்பனால் பேசப் படாவிட்டாலும், அயோத்தியா காண்டம்முழுவதையும் பார்க்கும்போது இதனை ஏற்றுக் கொண்டுதான் அவன் பேசுகின்றான் என்பதை அறிய முடிகின்றது. கன்யா சுல்க நிகழ்ச்சியைத் தசரதன், கைகேயி என்ற இருவர் மட்டும் அறிந்ததோடு அல்லாமல்இராகவனும் அறிந்திருந்தான் என்பதைச் சந்தர்ப்பம் வரும்போது அவன் கூற்றாகவே வைத்துப் பேசவைக்கின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். மூல நூலாகிய வால்மீகத்தில் இந்நிகழ்ச்சி இராமனும் பரதனும் காட்டில் சந்திக்கின்ற காலத்தில் பரதனிடம் இராமனே கூறுவதாக அமைந்துள்ளது. பரதன் கூட அதை ஓரளவு அறிந்திருந்தான் என்பதையும் அந்தப் பாடலின் மூலமே தெரிவிக்கின்றான்.ஆழ்ந்து சிந்தித்தால் மந்திரப் படலத்தில் வருகின்ற பாடல் இந்தக் கருத்தை வலியுறுத்துவதாகஅமைந்திருப்பதைக் காணமுடியும். மைந்தனை அழைத்து ‘நீ இந்த அரசை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான்’ தவம் செய்யப்போகிறேன்’ என்று 14 பாடல்களில் தசரதன் பேசுகிறான். மூத்த பிள்ளையாகிய இராகவனே பட்டத்தைஏற்கக் கடப்பாடுடையவன்; இதை உலகம் அறியும். ‘மயில் குலம் முறை’என்று சொல்லப்படுகின்ற முறையில்தந்தைக்குப் பின் மூத்த மைந்தன் என்பது மரபு பற்றி வருவதேயாகும். இந்த அடிப்படை அனைவரும்ஏற்றுக்கொண்ட ஒன்றுதான் என்பதில் ஐயதே இல்லை. அப்படியிருந்தும் மூத்த மைந்தனாகிய இராகவனை அழைத்துப் பதினான்கு பாடல்களில் "சொல் மறா மகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்" (1380) ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய பிள்ளைகளைப் பெற்றவர்கள்தாம்உயர்ந்தவர்கள்,’ என்றெல் |